

கோவை:
தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 23-ந் தேதி தேர்தல் நடக்க உள்ளது. கோவை மாவட்டத்தில் தேர்தலுக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் தேர்தல் பிரிவினர் செய்து வருகின்றனர்.
அத்துடன் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தியும் மாவட்ட நிர்வாகம் கையெழுத்து இயக்கம், விழிப்புணர்வு பேரணி என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் கூடக்கூடிய இடங்களில் வாக்குப்பதிவின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அத்துடன் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் இடமான ரேஸ்கோர்ஸ், பஸ் நிலையங்கள், கடைவீதி பகுதிகளில் தேர்தலில் பொதுமக்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பதாகைகளும் வைத்து 100 சதவீத வாக்குப்பதிவை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
இப்படி மாவட்ட நிர்வாகம் ஒருபுறமும் வாக்குப்பதிவின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர்களும் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவு மற்றும் வாக்களிப்பதன் அவசியம் குறித்த தேர்தல் விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.
இன்றைய காலகட்டத்தில் எல்லோரது கையில் செல்போன் இருப்பதால் கல்லூரி மாணவர்கள் தங்களது தேர்தலில் வாக்களிப்பது தொடர்பான பிரசாரத்தை டிஜிட்டல் வாயிலாக மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தாங்களே செல்போனில் போஸ்டர்களை தயார் செய்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அவர்கள், வெளியிட்டுள்ள டிஜிட்டல் விழிப்புணர்வில் மக்கள் கைகளில் பதாகைகளை வைத்து கொண்டு சுற்றி நிற்பது போன்று, அந்த பதாகையில் எங்கள் உரிமை, எங்கள் போராட்டம் என் வாக்காளரே என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.
அதேபோன்று உங்கள் வாக்கு உங்கள் குரல், இருமுறை சிந்தித்து விவேகத்துடன் வாக்களியுங்கள், வாக்களிப்பது நமது உரிமை, நமது வாக்கு நமது கடமை என பல்வேறு வாசகங்கள் அடங்கிய டிஜிட்டல் விழிப்புணர்வு போஸ்டர்களை பதிவிட்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
கல்லூரி மாணவர்களின் இந்த புதுமையான பிரசாரத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக இளைஞர்கள் இதனை தங்கள் சமூக வலைதள பக்கங்களிலும் பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதையும் காண முடிகிறது.
மாதிரி வாக்குப்பதிவு நடத்துவதன் மூலம் நாங்கள் வாக்களிக்கும் முறைகளை தெரிந்து கொண்டோம். இதன் மூலம் நாங்கள் தயக்கமின்றி எங்களது ஜனநாயக கடமையை ஆற்ற முடியும். எல்லோரும் வாக்களிக்க வேண்டும்.
வாக்களிப்பது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் நடந்து வரும் நிலையில் நாங்கள், முதற்கட்டமாக சமூக வலைதளங்களில் டிஜிட்டல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறோம். இதற்காக நாங்கள் எங்களது செல்போன்களில் உள்ள வீடியோ எடிட்டிங் செயலிகளைப் பயன்படுத்தி விழிப்புணர்வு போஸ்டர்களை தயாரித்து அதனை சமூக வலைதளத்தில் பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். தினமும் 4 விழிப்புணர்வு போஸ்டர்கள் வீதம் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வாக்குப்பதிவின் அவசியம் குறித்தும், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தியும் இந்த பிரசாரத்தை நாங்கள் முன்னெடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.