ஆக்ஸ்போர்டு தடுப்பூசி 70 சதவீதம் செயல்திறன் கொண்டது - அஸ்ட்ரா ஜெனேகா அறிவிப்பு

இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசி உருவாக்கியுள்ளது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

லண்டன்:

கொரோனா வைரசுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் உலகின் பலநாடுகள் முயற்சி செய்து வருகின்றன. குறிப்பாக இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசி ஒன்றை உருவாக்கியுள்ளது.  

இந்த தடுப்பூசியின் 2 கட்ட பரிசோதனைகளிளும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து தற்போது 3-ம் கட்ட பரிசோதனை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் 3-ம் கட்ட பரிசோதனையின் இடைக்கால பரிசோதனை முடிவுகளை அஸ்ட்ரா ஜெனேகா இன்று வெளியிட்டுள்ளது. 

அதில் 131 கொரோனா பாதிக்கப்பட்டவர்களிடம் தடுப்பூசியை செலுத்தி நடத்திய பரிசோதனையில் தடுப்பூசி 70.4 சதவீதம் செயல் திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுகள் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களின் முடிவுகளை அடிப்படையாக கொண்டு வெளியாகியுள்ளது.

முதல் டோஸ் முறையில் ஒரு மாத இடைவெளியில் 2 முறை முழு அளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. அதில் 62 சதவீதம் செயல்திறன் ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்தது.

இதையடுத்து இரண்டாவது டோஸ் முறையில் ஒரு மாத இடைவெளியில் முதல்முறை பாதி அளவிலும், இரண்டாவது முறை முழு அளவிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. அதில் தடுப்பூசி 90 சதவீதம் செயல்திறன் செயல்திறன் கொண்டதாக தெரியவந்துள்ளது.

இதன்மூலம் இரண்டு டோஸ்முறை பரிசோதனையின் மூலம் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி 70.4 சதவீதம் செயல்திறன் கொண்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் செயல்திறனை 90 சதவீதமாக கொண்டுவரமுடியும் என அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, அமெரிக்காவின் மாடர்னா நிறுவன தடுப்பூசி 94.5 சதவீத செயல்திறனும், ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசி 90 சதவீத செயல்திறனுடனும், ரஷியாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி 92 சதவீத செயல்திறனும், இந்தியாவின் கோவாக்சின் 60 சதவீதமும் செயல்திறன் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com