தமிழகம் முழுவதும் 9 ஆயிரம் போலீசாருக்கு கொரோனா பாதிப்பு - 258 பேர் உயிரிழந்தனர்

ஆஸ்பத்திரிகளுக்கு செல்லும் போது முழு கவச உடைகளை அணிந்து செல்ல வேண்டும் என்றும் காவலர்களை உயர் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

சென்னை:

தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பரவல் இருந்து வருகிறது.

கடந்து ஆண்டை விட இந்த ஆண்டு வைரசின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. போலீசார் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருவதுடன் தொடர்ந்து குற்றத்தடுப்பு செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதையடுத்து போலீசாருக்கும் அதிகளவில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 9 ஆயிரம் காவலர்கள் கொரோனாவால் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

மாநிலம் முழுவதும் 258 காவலர்கள் இதுவரை மரணம் அடைந்துள்ளனர். சென்னையில் 12 போலீசார் உயிரிழந்து இருக்கிறார்கள். கடந்த ஆண்டு 7 பேரும், இந்த ஆண்டு இதுவரையில் 5 பேரும் கொரோனாவின் பிடியில் சிக்கி பலியாகி உள்ளனர்.

சென்னையில் சுமார் 4 ஆயிரம் காவலர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போலீஸ் கமி‌ஷனர் மகேஷ்குமார் அகர்வால், அனைத்து காவலர்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.

50 வயதுக்கு மேற்பட்ட காவலர்களுக்கு எளிமையான பணிகளை வழங்க வேண்டும். வெளியில் சென்று வேலை செய்யும் வகையிலான பணிகளை அவர்களுக்கு வழங்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆஸ்பத்திரிகளுக்கு செல்லும் போது முழு கவச உடைகளை அணிந்து செல்ல வேண்டும் என்றும் காவலர்களை உயர் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

பணிபுரியும் நேரங்களில் கண்டிப்பாக முககவசம் அணிந்து இருக்க வேண்டும். பொதுமக்களிடம் பேசும் போது சமூக இடைவெளியை கடைபிடிக்க மறக்கக் கூடாது என்பது போன்ற அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com