

காஞ்சிபுரம்:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து தமிழக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் பட்டியலை கொடுத்தார். இந்த புகார் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் குன்னம் ஊராட்சியில் இன்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கிராமசபை கூட்டத்தை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-
ஒப்பந்தங்கள் மூலம் ரூ.6,131 கோடி முறைகேடு நிகழ்ந்துள்ளது. அதிமுக அரசின் ஊழல்கள் தொடர்பாக ஆளுநரிடம் 97 பக்க ஊழல்புகார் கடிதம் கொடுத்தேன். இந்த புகார்கள் மீது ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், அதன்பின்னர் நீதிமன்றத்தை நாடுவோம்.
ஏறக்குறைய ஒரு மாத காலமாக பல மாநிலங்களில் இருந்து விவசாயிகள் வந்து கடும் குளிருக்கு மத்தியில் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை அவர்களுடன் பேசவும் அவர்களின் கோரிக்கையை கேட்கவும் பிரதமர் முன்வரவில்லை. நமது முதல்வர் எடப்பாடி, பிரதமரின் இசைக்கு நடனமாடுகிறார். 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற்று நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.