ஆயுர்வேத மருந்து சந்தை 90 சதவீதம் வரை வளர்ச்சி- மத்திய சுகாதார மந்திரி தகவல்

கொரோனா தொற்று காலத்துக்குப் பிறகு நாட்டில் ஆயுர்வேத மருந்து சந்தை 90 சதவீதம் வரை வளர்ந்திருக்கிறது என மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.
மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷ்வர்தன்
மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷ்வர்தன்
Published on

புதுடெல்லி:

பதஞ்சலி நிறுவனத்தின் கொரோனா மருந்தான கொரோனில் வெளியீட்டு நிகழ்ச்சியில் நேற்று மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷ்வர்தன் பங்கேற்று பேசியதாவது:-

கொரோனா காலத்துக்கு முன்பு ஆயர்வேத மருந்து விற்பனை 15 முதல் 20 சதவீத அளவில் வளர்ந்து வந்தது என்றால், அது தற்போது 50 முதல் 90 சதவீதம் வரை வளர்ந்திருக்கிறது.

கொரோனாவுக்கு முன்பு நாட்டில் ஆயுர்வேத மருந்து நிறுவனங்களின் வருடாந்திர வருவாய் ரூ.30 ஆயிரம் கோடியாக இருந்தது.

தற்போது உலகளவில் பலரும் ஆயுர்வேத மருந்துகளை ஏற்றுக்கொள்ளத் தொடங்கியிருப்பதால், இதன் வியாபாரம் பெருமளவு அதிகரித்திருக்கிறது. ஏற்றுமதியும் வெகுவாக கூடியிருக்கிறது.

ஆயுர்வேதத்தை நவீன அறிவியல் முறையில் கொண்டு செல்ல வேண்டும். அப்போது அது முழு உலகுக்கும் பயனளிக்கும்.

ஆயுர்வேத மருந்துகளுக்கு உலக சுகாதார நிறுவனம் உரிய அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம் போன்ற நாடுகளிலும் இம்மருந்துகள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன.

இந்திய ஆயுர்வேத டாக்டர்கள் நியூசிலாந்தில் ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றபின் அங்கு பணிபுரியத் தொடங்கலாம்.

கொரோனாவின்போது, சுகாதார விஷயங்கள் தொடர்பாக மத்திய ஆயுஷ் அமைச்சகத்தால் 140 இடங்களில் 109 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில், சிகிச்சை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட 32 ஆய்வுகளின் முடிவுகள் ஊக்கம் அளிப்பதாக இருந்தன.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com