பாபர் மசூதி வழக்கை 9 மாதத்தில் முடிக்க வேண்டும்- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பாபர் மசூதி 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி இடிக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதிகள் 9 மாதத்தில் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
சுப்ரீம் கோர்ட்டு
சுப்ரீம் கோர்ட்டு
Published on

புதுடெல்லி:

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி இடிக்கப்பட்டது.

இந்த வழக்கில் பா.ஜனதா மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோரை ரேபரேலி கோர்ட்டு விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை அலகாபாத் ஐகோர்ட்டும் உறுதி செய்தது.

இதை எதிர்த்து சி.பி.ஐ. சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்தது. அப்போது பா.ஜனதா தலைவர்கள் மீதான விசாரணையை நடத்தும்படியும் 2 ஆண்டுக்குள் விசாரணை நடத்தி தீர்ப்பு அளிக்க வேண்டும் என்றும் கடந்த 2017-ம் ஆண்டு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து லக்னோ சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றத்தில் பாபர் மசூதி இடிப்பு வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு விதித்த காலக்கெடு கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்த நிலையில் லக்னோ சிறப்பு சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி சுப்ரீம்கோர்ட்டுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில் தனது பணி காலம் செப்டம்பர் மாதம் 30-ந்தேதியுடன் முடிவுக்கு வருவதாக அவர் குறிப்பிட்டு இருந்தார்.

இதனால் விசாரணையை நிறைவு செய்ய மேலும் 6 மாதம் அவகாசம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நாரிமன், சூரியகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு கூறும்போது, “வழக்கை விசாரித்து தீர்ப்பு அளிக்கும்வரை சி.பி.ஐ. சிறப்பு நீதிபதிக்கு பணி நீட்டிப்பு வழங்குவது தொடர்பான சட்ட விதிகளை கண்டறிந்து பதிலளிக்குமாறு உத்தரபிரதேச அரசுக்கு உத்தரவிட்டு இருந்தனர்.

இந்த நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சி.பி.ஐ. சிறப்பு நீதிபதியின் பணி காலத்தை நீட்டித்தும் வழக்கை விசாரணையை 9 மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com