திருக்கை மீன் முள்குத்தி பெண் தொழிலாளி உயிரிழப்பு

கனகவல்லி அடப்பாற்றில் இறால் மற்றும் மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்தார். எதிர்பாராத விதமாக ஆற்றில் இருந்த பெரிய திருக்கை மீனின் முள் கனகவல்லி மீது குத்தியது.
திருக்கை மீன் முள்குத்தி பெண் தொழிலாளி உயிரிழப்பு
Published on

வேதாரண்யம்:

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்த பழங்கள்ளிமேடு பகுதியை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவரது மனைவி கனகவல்லி (வயது 57). இவர் அப்பகுதியில் உள்ள அடப்பாற்றில் இறால் மற்றும் மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்தார்.

இந்நிலையில், வழக்கம்போல் நேற்று கனகவல்லி மற்றும் அதே பகுதியை சேர்ந்த 5 பேர் ஆற்றில் இறங்கி இறால் மற்றும் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றில் இருந்த பெரிய திருக்கை மீனின் முள் கனகவல்லி மீது குத்தியது.

இதில் அதிகப்படியான ரத்தம் வெளியேறியதில் அவர் மயக்கம் அடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இறந்த கனகவல்லிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com