search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவர் யார்? கார்கே-ராகுல் இன்று முக்கிய ஆலோசனை
    X

    தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவர் யார்? கார்கே-ராகுல் இன்று முக்கிய ஆலோசனை

    • ஜோதிமணிக்கு தலைவர் பதவி வழங்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
    • புதிய தலைவரா? அல்லது இருக்கும் தலைவருக்கே பதவி நீட்டிப்பா என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியின் பதவிக்காலம் ஏற்கனவே நிறைவடைந்துவிட்டதால் புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்ற பேச்சு கடந்த ஒரு வருடமாகவே அடிபடுகிறது. ஆனால் டெல்லி மேலிடம் எந்த முடிவும் எடுக்கவில்லை.

    இந்நிலையில் தற்போது புதிய தலைவர் நியமனம் தொடர்பாக டெல்லி மேலிடம் பரிசீலித்து வருகிறது.

    இதையடுத்து தலைவர் பதவிக்கான ரேசில் பலர் இறங்கி இருக்கிறார்கள். இந்த போட்டியில் எம்.பி.க்கள் ஜோதிமணி, செல்வக்குமார், கார்த்திக் சிதம்பரம், முன்னாள் எம்.பி. பி.விசுவநாதன், செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் இருக்கிறார்கள்.

    செல்வப்பெருந்தகை தலித் என்ற துருப்பு சீட்டை வைத்துள்ளார். அதே நேரம் அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து காங்கிரசுக்கு வந்தவர். அவருக்கு எதிராக கட்சியினரும் பல புகார்களை மேலிடத்துக்கு அனுப்பி உள்ளார்கள்.

    ஜோதிமணி எம்.பி ராகுலுக்கு நெருக்கமானவர். எனவே ராகுலின் தேர்வு ஜோதிமணியாகத் தான் இருக்கும் என்கிறார்கள்.

    ஆனால் ஜோதிமணிக்கும் கூட்டணியின் பிரதான கட்சியான தி.மு.க.வுக்கும் சுமூகமான உறவு இல்லை. கரூர் தொகுதியை சேர்ந்த அமைச்சர் செந்தில்பாலாஜி ஜோதிமணிக்கு எதிராக உள்ளார்.

    வருகிற தேர்தலிலும் கரூர் தொகுதியில் தி.மு.க. போட்டியிட விரும்புகிறது. எனவே ஜோதிமணிக்கு தலைவர் பதவி வழங்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    டாக்டர் செல்வக்குமார் எம்.பி. இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்தபோது கட்சியை திறம்பட வளர்த்தவர். தனக்கு தலைவர் பதவி கொடுத்ததால் ஏற்க தயார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    கார்த்தி ப.சிதம்பரம் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தனக்கு அனைத்து தகுதியும் இருப்பதாக பகிரங்கமாகவே கூறினார். அவரும் தலைவர் பதவியை பெறுவதற்கு டெல்லியில் தலைவர்களை சந்தித்து வருகிறார். தனது தந்தையான ப.சிதம்பரத்திடமும் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

    முன்னாள் எம்.பி. பி.விசுவநாதன் தலித் சமூகத்தை சேர்ந்தவர். இதுவரை தலித்துக்கு தலைவர் பதவி வழங்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக எந்த பதவியிலும் இல்லை. அதேநேரம் கேரள மாநில பொறுப்பாளராக இருந்து கட்சியை வளர்த்ததையும், ராகுல் யாத்திரையை சிறப்பாக நடத்தியதையும் குறிப்பிட்டுள்ளார். மாநில தலைவர் பதவி வழங்கினால் எம்.பி. தேர்தலில் சீட் கேட்கப்போவதில்லை என்றும் அவர் உத்தரவாதம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

    திருநாவுக்கரசர் ஒரு முறை தலைவராக இருந்துள்ளார். மற்ற தலைவர்களை போல் தனக்கும் மீண்டும் ஒரு முறை வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.

    இதற்கிடையில் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சசிகாந்த் செந்தில் தலைவர் பதவிக்கு முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இது பற்றி அவர் கூறும்போது, தலைவர் பதவிக்கான ரேசில் நான் இருக்கிறேனா? இல்லையா என்பது எனக்கு தெரியாது. அது கட்சி மேலிடம் எடுக்க வேண்டிய முடிவு என்றார்.

    இதற்கிடையில் கே.எஸ்.அழகிரியும் டெல்லி சென்றுள்ளார். தனது பதவி காலத்தில் கோஷ்டி பூசல் இல்லை. சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. எனவே அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலையும் சிறப்பாக எதிர்கொள்ள தனக்கு பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

    இன்று பிற்பகலில் காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் ஆகியோர் தமிழகத்துக்கு புதிய தலைவர் நியமனம் தொடர்பாக ஆலோசிக்கிறார்கள்.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் கூட் டணி கட்சிகளுடன் சுமூகமாக செல்லக்கூடியவர், கூட்டணி கட்சிகள் விரும்பக் கூடியவருக்கு முன்னுரிமை கொடுத்து புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

    புதிய தலைவரா? அல்லது இருக்கும் தலைவருக்கே பதவி நீட்டிப்பா என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.

    Next Story
    ×