search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை பார்வையிட்ட தெலுங்கானா அரசு அதிகாரிகள்
    X

    முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை பார்வையிட்ட தெலுங்கானா அரசு அதிகாரிகள்

    • முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அலுவலர் இளம்பகவத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.
    • காலை உணவு திட்டம் அனைத்து தரப்பிலும் வரவேற்பு பெற்றுள்ளது.

    சென்னை:

    முதலமைச்சர் காலை உணவு திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 18 லட்சம் மாணவ-மாணவிகள் பயன் அடைகிறார்கள்.

    பள்ளிக்கு காலை உணவு சாப்பிடாமல் மாணவர்கள் வருவதால் கல்வி கற்பதில் ஏற்படும் சிரமங்கள், பள்ளி இடைநிற்றலை தவிர்த்தல் போன்ற காரணத்திற்காக இத்திட்டம் செயல்படுத்துவதால் பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன.

    பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அது போலவே இத்திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துகிறார்கள் என்பதை பார்ப்பதற்காக தெலுங்கானா மாநில அரசு அதிகாரிகள் நேற்று இரவு சென்னை வந்தனர்.

    அவர்கள் இன்று அதிகாலையில் வட சென்னை பகுதியில் காலை உணவு தயாரிக்கும் சமையல் கூடங்களை பார்த்தனர்.

    சென்னை வந்துள்ள தெலுங்கானா மாநில முதலமைச்சரின் செயலாளர் ஸ்மிதா சபர்வால், அரசு பழங்குடியினர் நலத்துறை, செயலாளர் டாக்டர்.கிறிஸ்டினா சொங்து , கல்வித்துறை செயலாளர் கருணா வக்காட்டி, முதலமைச்சரின் சிறப்புப் பணி அலுவலர் பிரியங்கா வர்கீஸ், பெண்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் துறை அரசு சிறப்புச் செயலாளர் பாரதி ஹொல்லிக்கேரி, உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் ராயபுரத்தில் உணவு தயாரிக்கும் கூடம் மற்றும் மாநகராட்சி உருது தொடக்க பள்ளியில் திட்ட செயல்பாடுகளை பார்வையிட்டனர்.

    அவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அலுவலர் இளம்பகவத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.

    உணவு தயாரிக்கும் கூடத்தில் எவ்வாறு உணவு தயாரிக்கப்படுகிறது, உணவு பொருட்கள் கொள்முதல் செய்யும் முறை, பள்ளிகளுக்கு எவ்வாறு எடுத்துச் செல்லப்படுகிறது என்பதை கேட்டு தெரிந்து கொண்டதோடு, உணவை ருசி பார்த்தனர்.

    அதை தொடர்ந்து ராயபுரம் ஆரத்தூண் சாலையில் உள்ள மாநகராட்சி உருது தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுவதை பார்வையிட்ட தெலுங்கானா அதிகாரிகள் பள்ளி ஆசிரியர்களிடத்தில் நாளொன்றுக்கு எத்தனை மாணவர்கள் பயன்பெறுகிறார்கள், பெற்றோர்களின் கருத்துகள் குறித்து கேட்டறிந்தனர்.

    பின்னர் இளம்பகவத் நிருபர்களிடம் கூறும்போது, காலை உணவு திட்டம் அனைத்து தரப்பிலும் வரவேற்பு பெற்றுள்ளது. தெலுங்கானா மாநில அலுவலர்களை போல மற்ற மாநில அலுவலர்கள் விரும்பினாலும் அவர்களும் பார்வையிடலாம் என தெரிவித்தார்.

    Next Story
    ×