தொடர் மழை- சென்னையில் இருந்து வந்த ரெயில்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன

தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் வேறு மார்க்கத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.ரெயில் நிலையத்தில் பயணிகள் மிகுந்த அவதியடைந்தனர்.
தொடர் மழை- சென்னையில் இருந்து வந்த ரெயில்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன
Published on

திண்டுக்கல்:

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் நேற்று முதல் பலத்தமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு வரும் ரெயில்கள் தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. நெல்லை எக்ஸ்பிரஸ் காலை 2.40 மணிக்கு திண்டுக்கல் ரெயில் நிலையம் வரும். அந்த ரெயில் இன்று காலை 3 மணிக்கு திண்டுக்கல் வந்தடைந்தது. ஆனால் 2 மணி நேரம் தாமதமாக 4.58 மணிக்குதான் திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு சென்றது.

இதே போல் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் இரவு 2.17 மணிக்கு திண்டுக்கல் ரெயில் நிலையம் வரும் அந்த ரெயில் 5.55 மணிக்கு வந்தது. சுமார் 3 மணி நேரம் தாமதமாக 9 மணிக்கு திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு சென்றது.

மதுரை வழித்தடத்தில் ரெயில்கள் இயக்க முடியாத நிலை உள்ளதால் பெரும்பாலான ரெயில்கள் கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சிக்னல் கோளாறு மற்றும் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதன் காரணமாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் வேறு மார்க்கத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி திண்டுக்கல்லில் இருந்து மதுரை வழியாக நெல்லை, நாகர்கோவில் செல்லும் ரெயில்கள் திண்டுக்கல்லில் இருந்து பழனி, பொள்ளாச்சி வழியாக இயக்கப்பட்டது. இதே போல் மும்பையில் இருந்து நாகர்கோவில் வந்த ரெயிலும் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் 3 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு தாமதமாக சென்றது. இதனால் ரெயில் நிலையத்தில் பயணிகள் மிகுந்த அவதியடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com