search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ராஜாவூர் கோவிலில் பட்டியல் இன மக்கள் திரண்டு சென்று வழிபாடு
    X

    ராஜாவூர் கோவிலில் பட்டியல் இன மக்கள் திரண்டு சென்று வழிபாடு

    • மாவட்ட நிர்வாகம் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கும் என்று உறுதிமொழி அளித்தனர்.
    • தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் நல உரிமை இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மடத்துக்குளம்:

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா மைவாடி ஊராட்சி ராஜாவூர் கிராமத்தில் கடந்த 5-ந்தேதி பட்டியல் இன நபர் மீது வன்கொடுமை தாக்குதல் நடைபெற்ற நிலையில் பாதிக்கப்பட்ட நபருக்கு ஆதரவாக தமிழக தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கள ஆய்வு நடத்தப்பட்டது.

    அப்போது ராஜாவூர் கிராமத்தில் பட்டியல் இன மக்கள் பொது வீதிகளில் கால்களில் செருப்பு அணிந்து செல்ல முடியாது, அப்பகுதியில் உள்ள டீ கடையில் இரட்டை டம்ளர் முறை இருப்பதையும் மற்றும் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான ராஜகாளியம்மன் கோவிலில் பட்டியல் இன மக்களுக்கு வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டு உள்ளதும் தெரியவந்தது.

    இதையடுத்து அந்த மக்களின் உரிமைக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13 -ந்தேதி உடுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம், வன்கொடுமை நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும், மேலும் பொது இடங்களில் பட்டியல் இன மக்களுக்கு சட்ட உரிமை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 18 -ந் தேதி திருப்பூர் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டது.


    மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் 24-ந்தேதி உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர்.

    இந்தநிலையில் மாவட்ட நிர்வாகம் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கும் என்று உறுதிமொழி அளித்தனர். இதையடுத்து ராஜாவூர் கிராமத்தில் உள்ள கோவிலில் வழிபடவும், பொது பாதையில் காலில் செருப்பு அணிந்து நடக்கவும் முடிவு செய்ததுடன், அதை உறுதி செய்யும் வகையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் கனகராஜ் தலைமையில் மாநில தலைவர் செல்லக்கண்னு முன்னிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் ராஜாவூர் கிராமத்தில் பேரணியாக பொது பாதையில் காலில் செருப்பு அணித்து சென்றனர். பின்னர் அங்குள்ள ராஜ காளியம்மன் கோவிலுக்குள் சென்று வழிபட்டனர்.

    முன்னதாக இந்த சமூக மாற்ற நிகழ்ச்சியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட பொருளாளர் பஞ்சலிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் வடிவேல், சிஐடியு., நிர்வாகி பன்னீர்செல்வம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தந்தை பெரியார் திராவிட கழகம், இந்திய தொழிற்சங்க மையம், ஆதிதமிழர் சன நாயக பேரவை, திராவிடர் தமிழர் கட்சி, ஆதிதமிழர் கட்சி, திராவிடர் விடுதலை கழகம், ஆதிதமிழர் முன்னோர் கழகம், ஆதி தமிழர் பேரவை, தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் நல உரிமை இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இது குறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நிர்வாகிகள் கூறுகையில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலுக்குள் சென்று வழிபட்டதன் மூலமாக பட்டியல் இன மக்களின் வழிபாட்டு உரிமை போராட்டம் வெற்றி பெற்று ள்ளது என்றனர். மேலும் கோவிலில் வழிபட தடை நீங்கியதால் ராஜாவூர் பகுதி பட்டியல் இன மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    Next Story
    ×