search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    போலி மதுபான தொழிற்சாலை நடத்திய தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் உள்பட 4 பேர் கைது
    X

    போலி மதுபான தொழிற்சாலை நடத்திய தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் உள்பட 4 பேர் கைது

    • போலி மதுபான பாட்டில்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் தயாரிக்கப்பட்டது
    • போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கடலூர் மாவட்ட மது விலக்கு போலீசார் வடலூர் பகுதியில் கடந்த வாரம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு போலி மதுபாட்டில்கள் விற்பனையில் ஒருவர் ஈடுபட்டிருந்தார். அவரை கைது செய்த மதுவிலக்கு போலீசார், போலி மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் போலி மதுபான பாட்டில்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 தனிப்படை போலீசார் கல்வராயன்மலையில் தங்கி விசாரணை நடத்தினர். இதில் கல்வராயன்மலை அருகே நடுத்தொரடிப்பட்டில் போலி மதுபான தொழிற்சாலை இயங்கியதை கடலூர் மாவட்ட தனிப்படை போலீசார் கண்டறிந்தனர்.

    இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் அங்கு சென்று, போலி மதுபான தொழிற்சாலை கட்டிடத்தை சுற்றிவளைத்தனர். உள்ளே சென்று பார்த்தபோது. மதுபானம் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள், பல்வேறு நிறுவனங்களின் பெயரில் அச்சிடப்பட்டிருந்த லேபில்கள். காலி பாட்டில்கள், பாட்டில் மூடி, காலி அட்டை பெட்டிகள், சில எந்திரங்கள் இருந்ததை கண்டனர். மேலும், 454 மதுபாட்டில்கள் அட்டைப் பெட்டியில் வைத்து வெளியில் விற்பனைக்கு அனுப்ப தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததையும் தனிப்படை போலீசார் கண்டறிந்தனர்.

    இவை அனைத்தையும் பறிமுதல் செய்த கடலூர் மாவட்ட போலீசார், இது தொடர்பாக 4 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரையும், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களையும் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜிடம் கடலூர் மாவட்ட தனிப்படை போலீசார் ஓப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வீரன், அதே மாவட்டத்தை சேர்ந்த பொறையார் பகுதி ரியாஸ் அகமது, கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதி தொரடிப்பட்டை சேர்ந்த வெங்கடேசன், கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த வயலாமூர் குபேந்திரன் என்பது தெரியவந்தது.

    இவர்கள் தயாரித்த போலி மதுபானங்களை தமிழகத்தில் உள்ள எந்தெந்த பகுதிகளுக்கு, எப்படி, யார் மூலமாக அனுப்பி வைத்தனர். இதில் தொடர்புடைய மற்றவர்கள் யார்? யார்? என்பது குறித்து கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கல்வராயன்மலை பகுதியில் சாராயம் காய்ச்சி விற்கப்படுவதும், இது தொடர்பாக போலீசார் வாரம் ஒரு முறை 2 ஆயிரத்திலிருந்து, 3 ஆயிரம் லிட்டர் சாராய ஊரல்களை கண்டறிவது வழக்கம். அதே சமயத்தில் இந்த ஊரல்களை வைத்திருந்தவர்களோ, அதனை காய்ச்சியவர்களோ இதுவரை பெரியளவில் கைது செய்யப்படவில்லை.

    இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை தொரடிப்பட்டில் போலி மதுபான தொழிற்சாலை இயங்கி வந்ததை கடலூர் மாவட்ட தனிப்படை போலீசார் கண்டறிந்து, கள்ளக்குறிச்சி போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

    அதாவது, இது சம்பந்தமாக கள்ளக்குறிச்சி மதுவிலக்கு போலீசாருக்கோ, கரியாலூர் போலீசாருக்கு தெரியாதா?, தெரியவில்லை என்றால் ஏன் தெரியவில்லை, தெரிந்திருந்தால் இவ்வளவு நாட்களாக ஏன் பிடிக்கவில்லை? என்பன போன்ற பல்வேறு கோணங்களில் கல்வராயன் பகுதி மக்கள் போலீசார் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    Next Story
    ×