search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு-குற்ற தடுப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை
    X

    தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு-குற்ற தடுப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்திலும் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆலோசனைகளை வழங்கினார்.
    • போதை பொருள் மற்றும் இணைய வழி குற்றச்சம்பவங்களை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைகளை வழங்கினார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது ஆலோசனை நடத்துவது உண்டு.

    ஒவ்வொரு மாவட்டத்தில் நிலவும் குற்றச் செயல்கள், ரவுடிகள் அட்டகாசம், போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் எந்த அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பது பற்றி இந்த கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படும். அதற்கேற்ப கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவுகளும் பிறப்பிக்கப்படும்.

    அதேபோல் கடந்த மாதமும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளை கட்டுப்படுத்த, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. குறிப்பாக போதை பொருள் கடத்தலை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக ஆலோசனை மேற்கொண்டார். அப்போது குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மீண்டும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை குறித்து உயர் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினார்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் மாடி கூட்ட அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்.

    இதில் தலைமை செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பணீந்திரரெட்டி, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், உளவுப் பிரிவு அதிகாரி டேவிட்சன் ஆசிர்வாதம் மற்றும் போலீஸ் கூடுதல் டி.ஜி.பி.க்கள், மண்டல ஐ.ஜி.க்கள், போதை தடுப்பு பிரிவு போலீஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இவர்களுடன் ஒவ்வொரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளும் காணொலி வாயிலாக இணைந்திருந்தனர்.

    கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. எந்தெந்த மாவட்டங்களில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது என்பது பற்றியும் அதை கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது என்றும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    இதுவரை எவ்வளவு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்ற புள்ளி விவரங்களும் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. 16 மாவட்டங்களில் கொலை-கொள்ளை சம்பவங்கள் அதிகரித்தது பற்றியும் அதை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும் போலீஸ் அதிகாரிகள் விளக்கி கூறியதாக தெரிகிறது.

    திருப்பூர், தர்மபுரி, தேனி, கடலூர், ஈரோடு, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இதுவரை நடந்த கொலை-கொள்ளை சம்பவங்களில் எவ்வளவு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற விவரமும் கேட்கப்பட்டது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவையில் நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் குறித்தும் அதுபோன்ற சம்பவம் இனி நடைபெறாமல் இருக்க போலீசார் தீவிரமாக புலனாய்வு மேற்கொண்டு முன்கூட்டியே தடுக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

    தமிழ்நாட்டில் போதை பொருளை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் அதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் போதை பொருள் விற்பவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

    கடந்த 2020-ம் ஆண்டு குற்றச் சம்பவங்களையும் 2021 மற்றும் 2022-ம் ஆண்டு குற்றச் சம்பவங்களையும் ஒப்பிட்டு பார்த்து எந்தெந்த ஆண்டுகளில் குற்றங்கள் குறைந்திருந்தது? எந்த ஆண்டில் குற்றங்கள் அதிகரித்தது என்பது பற்றியும் விரிவான புள்ளி விவரங்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுத்து வைக்கப்பட்டிருந்தது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்திலும் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆலோசனைகளை வழங்கினார்.

    குறிப்பாக போதை பொருள் மற்றும் இணைய வழி குற்றச்சம்பவங்களை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைகளை வழங்கினார்.

    Next Story
    ×