தமிழக அரசு அவ்வையார் விருது வழங்கி கவுரவிப்பு- தமிழ் ஆசிரியை விருதுகளின் நாயகியாக ஜொலிக்கிறார்

கமலம் சின்னசாமி ஊட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 33 ஆண்டுகளாக தமிழ் ஆசிரியராக வேலை பார்த்துள்ளார். கடந்த 36 ஆண்டுகளாக கவிதைகள், புனைவது, வானொலி பேச்சு, பட்டிமன்றங்களிலும் பங்கேற்று பேசியுள்ளார்.
தமிழக அரசு அவ்வையார் விருது வழங்கி கவுரவிப்பு- தமிழ் ஆசிரியை விருதுகளின் நாயகியாக ஜொலிக்கிறார்
Published on

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் கமலம் சின்னசாமி. இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு இவர் பெண்கள் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை ஆற்றியதற்காக அவ்வையார் விருது வழங்கப்பட்டது.

சென்னையில் நடந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விருதினை, கமலம் சின்னசாமிக்கு வழங்கினார்.

கமலம் சின்னசாமியின் சொந்த ஊர் ஊட்டி ஆகும். இவரது பெற்றோர் ராமசாமி-மாரியம்மாள். இவர் எம்.காம். எப்.ஐ.ஏ. சி.ஏ படித்தவர். ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியை. இதுதவிர தமிழ் புலவர், மதுரை தமிழ் சங்க புலவர் பட்டங்களையும் பெற்றுள்ளார்.

இவரது கணவர் சின்னசாமி. இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வந்தார்.

கமலம் சின்னசாமி ஊட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 33 ஆண்டுகளாக தமிழ் ஆசிரியராக வேலை பார்த்துள்ளார். மேலும் 7 ஆண்டுகள் ஆங்கில ஆசிரியராகவும் பணியாற்றி உள்ளார்.

இவர் ஆசிரியர் பணி மட்டுமின்றி எழுத்தாளராகவும், கவிதையாளராகவும் அறியப்படுகிறார். இவர் கடந்த 36 ஆண்டுகளாக கவிதைகள், புனைவது, வானொலி பேச்சு, பட்டிமன்றங்களிலும் பங்கேற்று பேசியுள்ளார்.

இதுதவிர சிறந்த ஓவியம் தீட்டுபவர், வண்ணக் கோலங்கள், உல்லன் வேலைப்பாடுகள், பனியன், மப்ளர், ஸ்கார், குரோஷா, பூ வேலைகள், ஆன்மிக பாடல்கள் இசைப்பதில் ஆர்வம், தையல் கலையிலும் ஆர்வமுடையவராகவும் உள்ளார்.

இவர் இணையில்லா எமது தமிழ், தாயும் தனயனும், என் தெய்வம் ஸ்ரீ சத்ய ஸாயி, எனக்கு பிடித்த சமுதாயம், கொங்கு நாட்டு தங்கம் எமது சமுதாயம், இவளா என் மனைவி, நலந்தரும் நாட்டு வைத்தியம் பாகம்-1, கருமியின் காசு, சங்ககால பெண்மணிகள், இன்றைய மாணவ, மாணவிகள், மணமக்கள், வங்கம் கண்ட தங்கம், ஊட்டி அவ்வையின் ஆத்திசூடி, சிறுவர் பாடல்கள் உள்பட பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளார்.

சிறந்த பணி, நூல்களுக்காக எண்ணற்ற விருதுகளும் வாங்கியுள்ளார். சாரண சாரணியர் அரசு விருது, கவியருவி, சைவச் சித்தாந்த செம்மல், மலைச்சாரல், மகுடம், காரைக்கால் அம்மையார் விருது, கராத்தே விருது, கூடலூர் தமிழ்சங்க விருது, 2 முறை உலக சாதனையாளர் விருது, சேவா ரத்னா விருது, சிங்கப்பெண் விருது, பாரதி விருது, பாரதிதாசன் விருது, ஈரோடு தமிழ்சங்கம் விருது, நெய்வேலி தமிழ்சங்க விருது, காங்கயம் அளித்த அவ்வை விருது, ஊட்டி மலைச்சாரல் அளித்த ஊட்டி அவ்வை விருதுகள் என பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

அவ்வையார் விருது வாங்கிய கமலம் சின்னசாமிக்கு அவரது உறவினர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com