search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மழை வேண்டி மலை உச்சியில் உணவருந்தி பக்தர்கள் வழிபாடு
    X

    மழை வேண்டி மலை உச்சியில் உணவருந்தி பக்தர்கள் வழிபாடு

    • மழை வேண்டி பாறை மீது சோறிட்டு பக்தர்கள் உணவருந்தும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சி நடந்து வருகிறது.
    • வடப்புளி பெருமாள், ஆஞ்சநேயர் கோவில் மற்றும் கிராம தெய்வங்களை வழிபட்டு ராமச்சந்திர மூர்த்தி கோவிலை வந்தடைந்தனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் பேரையூர் அருகே கொப்பையாசாமி மலை உச்சியில் பிரசித்தி பெற்ற கொப்புக்கொண்ட பெருமாள்சாமி கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த கோவிலில் மழை வேண்டி பாறை மீது சோறிட்டு பக்தர்கள் உணவருந்தும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சி நடந்து வருகிறது.

    அந்த வகையில் இந்த ஆண்டும் பி.தொட்டியபட்டியிலுள்ள ராமச்சந்திர மூர்த்தி கோவிலிலிருந்து கடந்த இருதினங்களாக அங்குள்ள முக்கிய வீதிகளில் மருளாளி ஆடிவர பொதுமக்கள் சாமிக்கு காணிக்கையாக அரிசி, தானிய வகைகளை வழங்கினர். அவை அனைத்தையும் வாங்கி சேமித்து நேற்று முன்தினம் இரவு கொப்பையா சாமி மலை உச்சியிலுள்ள கொப்புக்கொண்ட பெருமாள் கோவிலில் பக்தர்கள் அனைவரும் தங்கி வழிபட்டனர்.

    இந்த வழிபாடு நேற்று காலை தொடங்கி சாமிக்கு 11 விதமான பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தி பக்தர்களுக்கு கொப்புக் கொண்ட பெருமாள் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். காணிக்கையாக வாங்கி சேமித்து வைத்த அரிசி தானியங்களைக் கொண்டு மழை வேண்டி சாமிக்கு பொங்கல் மற்றும் சோறு படையிலிட்டு மருளாளி ஆடி வந்தார்.

    அப்போது பக்தர்கள் மழை வேண்டியும், தம்பதிகள் குழந்தை வரம் வேண்டி யும் மருளாளியிடம் வரமாக கேட்டு பிரசாதம் பெற்றனர். சாமிக்கு படையிலிட்ட சோற்றை கோவிலை சுற்றியுள்ள பாறைகளில் பக்தர் கள் அமர்ந்து பாறையில் சோறிட்டு உணவருந்தி வழிபட்டனர்.

    அவ்வாறு உணவருந்திய பின்பு பாறையில் கிடக்கும் எச்சத்தை சாமி வருணபகவானை வரவழைத்து மழை பெய்யச் செய்து அதனை சுத்தம் செய்யும் என்பது அப்பகுதி பொதுமக்களின் பராம்பரிய ஐதீகமாக இருந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பாறையில் உணவருந்திய பின்பு மருளாளியுடன் மீண்டும் மலையிலிருந்து கீழறங்கி ஊர்வலமாக பி.தொட்டிய பட்டி கண்மாய் பகுதியிலுள்ள வடப்புளி பெருமாள், ஆஞ்சநேயர் கோவில் மற் றும் கிராம தெய்வங்களை வழிபட்டு ராமச்சந்திர மூர்த்தி கோவிலை வந்தடைந்தனர்.

    இந்த திருவிழா இப்பகுதியிலுள்ள பக்தர்கள் பலரும் பெருமிதமாக கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்று மழை வேண்டுதலால் விவசாயங்கள் செழிக்கும் என்று கூறுகின்றனர். மேலும் அந்த பகுதியில் பக்தர்கள் தங்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு கொப்பையா என பெயர் சூட்டி சாமிக்கு நன்றி கடன் செலுத்துகின்றனர்.

    Next Story
    ×