search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மீண்டும் சர்ச்சை: டாஸ்மாக் மது குடித்த 2 பேர் மரணத்திற்கு காரணம் என்ன? போலீஸ் அதிகாரி பரபரப்பு தகவல்
    X

    மது குடித்து பலியான சிவக்குமார், முனியாண்டி.

    மீண்டும் சர்ச்சை: டாஸ்மாக் மது குடித்த 2 பேர் மரணத்திற்கு காரணம் என்ன? போலீஸ் அதிகாரி பரபரப்பு தகவல்

    • ஒரே பகுதியில் மது குடித்த 2 பேர் அடுத்தடுத்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.
    • பிரேதப் பரிசோதனையிலும் ஆல்கஹால் தடயங்கள் அவரது உடலில் நுரையீரல், சிறுநீரகம் பகுதியில் இருந்தன.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள தச்சங் குறிச்சி கீழரத வீதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 44). இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். கட்டுமான சென்ட்ரிங் வேலை பார்த்து வரும் சிவக்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்தது.

    வழக்கம் போல் நேற்று முன்தினம் மதியம் மது குடித்து வீட்டுக்கு வந்தவர் இரவு சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றார். காலையில் நீண்ட நேரமாகவும் எழுந்திருக்கவில்லை. அவரது மனைவி அவரை தட்டி எழுப்ப முயன்ற போது இறந்திருப்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதேபோல் தச்சங்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முனியாண்டி (60) என்பவரும் மது குடித்து இறந்தார். தச்சங்குறிச்சி ஊராட்சியின் 4-வது வார்டு உறுப்பினராக இருக்கும் இவர் கொத்தனார் வேலை செய்து வந்தார். இவரும் நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது குடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பினார்.

    நேற்று காலை அவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. உறவினர்கள் லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி கொண்டு செல்லும் வழியில் முனியாண்டி பரிதாபமாக இருந்தார்.

    ஒரே பகுதியில் மது குடித்த 2 பேர் அடுத்தடுத்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. இது பற்றி தகவல் அறிந்த லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய் தங்கம் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

    மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமாரும் சம்பவ இடத்தில் விசாரித்தார். சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே மது குடித்து இரண்டு பேர் இறந்த சம்பவத்தை கண்டித்து பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் பிரேத பரிசோதனையில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன.

    இது தொடர்பாக விசாரணை அதிகாரி அஜய் தங்கம் இன்று கூறும்போது, இறந்த சிவக்குமார் கடந்த 3 தினங்களாக வீட்டில் எதுவும் சாப்பிடாமல் மது போதையில் இருந்து உள்ளார். பிரேதப் பரிசோதனையிலும் ஆல்கஹால் தடயங்கள் அவரது உடலில் நுரையீரல், சிறுநீரகம் பகுதியில் இருந்தன.

    அளவுக்கு அதிகமான மது அவரது உயிரைப் பறித்திருக்கலாம். மதுவில் சயனைடு, விஷக்கொல்லி மருந்துகள் போன்ற எந்த தடயங்களும் இல்லை. ஆனால் இறந்த முனுசாமியின் உடலில் ஆல்கஹால் அறிகுறி இல்லை. ஆனால் அவரும் டாஸ்மாக் கடையில் மது வாங்கிய சி.சி.டி.வி. பதிவு உள்ளது.

    முனியாண்டியை பொருத்தமட்டில் மது குடிக்கும் போது காலாவதியான தின்பண்டங்கள் எதையாவது சாப்பிட்டு உடல் உபாதை ஆகி இருக்கலாம். ஆகவே தான் வயிற் றுப்போக்கு ஏற்பட்டு இறந்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றார்.

    Next Story
    ×