search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    போர்க்களம் போன்ற தேர்தல் நெருங்குகிறது: திருவண்ணாமலை தீபம் போல நம்பிக்கை ஒளி தெரிகிறது- மு.க.ஸ்டாலின்
    X

    போர்க்களம் போன்ற தேர்தல் நெருங்குகிறது: திருவண்ணாமலை தீபம் போல நம்பிக்கை ஒளி தெரிகிறது- மு.க.ஸ்டாலின்

    • தி.மு.க.வை எதிர்த்தவர்களும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தைப் பாராட்டி வருவதால் எதிரிகள் அச்சமடைந்துள்ளனர்.
    • கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் அனைத்து தேர்தல்களிலும் தோற்றவர் பழனிசாமி.

    திருவண்ணாமலை:

    தி.மு.க. வடக்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக் கூட்டம் திருவண்ணாமலை அடுத்த மலப்பாம்பாடியில் நடைபெற்றது.

    கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்கினார். அமைச்சர் எ.வ.வேலு வரவேற்று பேசினார்.

    இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது:-

    திருவண்ணாமலையையும், தீபத்தையும் பிரிக்க முடியாது. அதேபோல, திருவண்ணாமலையையும், தி.மு.க.வையும் யாராலும் பிரிக்க முடியாது. 2021-ல் தி.மு.க. ஆட்சி அமைக்க அடித்தளமாக அமைந்தது திருவண்ணாமலை.

    'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' திட்டத்தை, இங்கிருந்துதான் தொடங்கினேன். வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளேன். தினமும் ஒரு மணி நேரம் கட்சிக்காக ஒதுக்கி, தமிழக அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டுசேர்க்க வேண்டும்.

    தி.மு.க.வை எதிர்த்தவர்களும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தைப் பாராட்டி வருவதால் எதிரிகள் அச்சமடைந்துள்ளனர்.

    திருவண்ணாமலையில் நடைபெற்ற வடக்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக் கூட்டம்

    தி.மு.க. ஆட்சியில் புதிய திட்டங்களை தொடங்கவில்லை என்று வயிற்று எரிச்சலில் பேசுகிறார். எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை தொடங்கிவைப்பதாக பொய் கூறுகிறார்.

    மகளிர் உரிமைத்தொகை, இலவச பஸ் பயணம், காலை சிற்றுண்டி, புதுமைப் பெண், நான் முதல்வன், நம்மைக் காக்கும் 48, இல்லம் தேடிக் கல்வி, 2 லட்சம் விவசாய மின் இணைப்புகள், அனைத்து சாதியினரும் அர்ச்சகர், ஆயிரம் கோவில்களில் குடமுழுக்கு போன்றவை அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களா? தரையில் ஊர்ந்துசென்ற பழனிசாமியே, கொஞ்சம் தலையை தூக்கிப் பாருங்கள். வேளாண்மை சட்டங்கள் மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து பா.ஜ.க.வுக்கு பல்லக்கு தூக்கியவர்தான் பழனிசாமி.

    கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் அனைத்து தேர்தல்களிலும் தோற்றவர் பழனிசாமி. வரும் மக்களவைத் தேர்தலிலும் அவர் முழுமையாக தோற்கடிக்கப்படுவார். தேர்தல் களம் என்பது போர்க்களம் போன்றது. அது தற்போது நெருங்கிக் கொண்டிருக்கிறது. பல போர்களை சந்தித்தது திருவண்ணாமலை மாவட்டம். இந்திய ஜனநாயகத்தை காக்கக்கூடிய போர்க்களத்தில் தற்போது நாம் இருக்கிறோம்.

    இந்த தேர்தலில் நாம் காணப்போகும் வெற்றிதான், எதிர்கால இந்தியாவுக்கு மிக முக்கியமானது. மக்களைப் பிளவுபடுத்தி, அடிமைப்படுத்தும் பா.ஜ.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய தேர்தல் களத்துக்கு, திருவண்ணாமலை பயிற்சி பாசறைக் கூட்டம் வழிகாட்டியாக அமையட்டும். திருவண்ணாமலை தீபம் தெரிவதுபோல, இந்தியாவுக்கு நம்பிக்கை ஒளி தெரிகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×