திருமண நிகழ்ச்சிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் - மீறினால் திருமண மண்டப உரிமம் ரத்து

பஞ்சாபில் திருமண நிகழ்ச்சிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளநிலையில் மீறினால் சம்பந்தப்பட்ட திருமண மண்டபத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.
திருமணம் - கோப்புப்படம்
திருமணம் - கோப்புப்படம்
Published on

சண்டிகார்:

பஞ்சாபிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அங்கு இதுவரை 7 ஆயிரத்து 821 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 199 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

நோய் தொற்றை குறைப்பது குறித்து முதல்-மந்திரி அம்ரிந்தர் சிங் நேற்று முன்தினம் சக மந்திரிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசித்தார். இதனையடுத்து புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடைபிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூட அனுமதி இல்லை. மீறுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்வார்கள். மேலும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் 50 பேர் பங்கேற்க இதுவரை அனுமதி அளிக்கப்பட்டது.

ஆனால் இனிமேல் 30 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி என்றும், மீறினால் சம்பந்தப்பட்ட திருமண மண்டபத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது. அலுவலகங்களில் பணிபுரிவோர் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதவிர ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என்று போலீசார் ஆய்வு செய்யவும் பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com