சட்டமன்ற தேர்தல் முடிந்ததும் சரத்குமாருக்கு தேசிய பொறுப்பு - வானதி சீனிவாசன் தகவல்

புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சி தொடர இன்னும் ஆயிரக்கணக்கான கோடியை கொட்டி கொடுப்பதற்கு பிரதமர் மோடி தயாராக இருக்கிறார்.
சட்டமன்ற தேர்தல் முடிந்ததும் சரத்குமாருக்கு தேசிய பொறுப்பு - வானதி சீனிவாசன் தகவல்
Published on

புதுச்சேரி:

பா.ஜ.க. தேசிய மகளிரணி அணி தலைவி வானதி சீனிவாசன் புதுச்சேரியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுச்சேரியை பொறுத்தவரை கடந்த 5 வருடங்களாக பிரதமர் மோடியின் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்திய மாநிலமாக இருந்து வருகிறது. சிறிய மாநிலங்கள் தங்களுடைய பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசின் உதவி எப்போதும் அவசியம்.

புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சி தொடர இன்னும் ஆயிரக்கணக்கான கோடியை கொட்டி கொடுப்பதற்கு பிரதமர் மோடி தயாராக இருக்கிறார். இந்த வளர்ச்சி பயணம் தடைபடாமல் இருக்க இந்த அரசு தொடர வேண்டும்.

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக, இந்தியா கூட்டணி பெயர் மட்டு தான் இருக்கிறது. ஆனால் கூட்டணி கிடையாது. எந்தளவுக்கு காங்கிரஸ்- தி.மு.க.-கம்யூனிஸ்டுகள் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதற்கு புதுச்சேரி சிறந்த உதாரணம்.

கோவை வாளையாறில் இரு கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து வாக்கு கேட்கின்றனர். வாளையாறு செக்போஸ்டை தாண்டினால் காங்கிரஸ்-கம்யூனிஸ்டு திட்டிக் கொண்டு இருக்கின்றனர்.

புதுச்சேரியில் அதைவிட ஒருபடி மேலேயே சென்றுவிட்டனர். ஒரே தொகுதியில் இருகட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். யாரும், யார் சொல்வதையும் கேட்பதில்லை. எந்தவித ஒருங்கிணைப்பும், ஒற்றுமையும் இல்லாத இந்தியா கூட்டணிக்கு ஓட்டளிப்பது புதுச்சேரி மக்கள் தங்களுடைய தலையில் தாங்களே மண்ணை அள்ளிப்போடுவதற்கு சமம்.

அந்த கூட்டணியின் அத்தனை வேட்பாளர் களையும் மக்கள் புறந்தள்ள வேண்டும். சிறிய மாநிலத்தில் கூட இவர்களால் ஒற்றுமையாக செயல்பட முடியவில்லை என்றால், இவர்களால் இந்த மாநிலத்தை எப்படி வளர்ச்சி பாதைக்கு எடுத்துச் செல்ல முடியும்?

தேர்தலில் ஏது நட்புரீதியான போட்டி? திமுக-காங்கிரஸ் பிரிந்திருப்பது எங்களுக்கு சாதகமல்ல. தேர்தலே எங்களுக்குத்தான் சாதகம்.

பெண்களுக்கு இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியதே பாஜக அரசுதான். அதற்கான காலம் கனியும்போது நிச்சயம் அதிகமான எண்ணிக்கையில் மகளிர் இடஒதுக்கீட்டில் வந்து விடுவார்கள்.

கோவை வடக்கு தொகுதியில் யார் போட்டியிடுவார்கள் என்பதை கட்சி தலைமை தகுந்த நேரத்தில் அறிவிக்கும்.

வருகிற தேர்தலில் அண்ணாமலை போட்டி தொடர்பாக கட்சி தலைமை சொல்லும். அ.தி.மு.க தோல்வியடையும் தொகுதிகளை பா.ஜ.க.வுக்கு ஒதுக்குவதாக சமூக வலைதளங்களில் பரப்பி, எங்கள் தொண்டர்களின் மன உறுதியை குலைக்க தி.மு.க. சதி செய்கிறது. மக்கள் எங்களுக்கு வாக்களிக்க காத்துக்கொண்டிருக்கிறார்கள். இதுவரை இல்லாத அளவுக்கு இரட்டை இலக்கத்தில் எங்கள் எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவைக்குள் நுழைவார்கள்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன், தனக்கு கொடுத்த ஒரு அசைன்மெண்ட்டை முடித்துவிட்டார். அவருக்கு பின்னால் நின்றவர்கள் தெருவில் நிற்கின்றனர். கமல்ஹாசன் செய்தது தியாகம் அல்ல துரோகம்.

5 மாநில தேர்தல் முடிந்தவுடன் சரத்குமாருக்கு தேசிய பொறுப்பு அளிக்கப்படும். இதுகுறித்து அவரிடம் கூறியுள்ளோம். அவரது ஆதங்கத்தை தலைவர்களிடம் கூறியுள்ளார். தலைவர்கள் அதனை கட்டாயம் கவனிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com