

கொல்கத்தாவை சேர்ந்தவர் ரித்தேஷ் ராஜ்ஷாபி (வயது 40).
இவர் புதுச்சேரியில் உள்ள மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) ஆணைய அலுவலகத்தில் உதவி கணக்கு அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
முத்தியால்பேட்டை திரு வள்ளுவர் நகர், ஜி.எஸ்.டி., குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். இவரின் மனைவி மோனிகா குமாரி மற்றும் குழந்தைகள் கொல்கத்தாவில் உள்ளனர். மோனிகாகுமாரி கொல்கத்தாவில் வங்கி அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு மோனிகா குமாரி, கணவரை செல்போனில் அழைத்த போது எடுக்கவில்லை. அதே அலுவலகத்தில் பணியாற்றும் மூத்த கணக்காளர் அசோக் குமாரை தொடர்பு கொண்டு, வீட்டுக்கு சென்று பார்க்கும்படி தெரிவித்துள்ளார்.
அசோக்குமார் மற்றும் ஆய்வாளர் பவன் ஆகியோர், ரித்தேஷ் ராஜ்ஷாபி வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. அவர்கள் முத்தியால் பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ரித்தேஷ் ராஜ்ஷாபி மூக்கில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தார்.
அவர் அருகே லேப்டாப், செல்போன், சில மாத்திரைகள் சிதறி கிடந்தன. போலீசார், ரித்தேஷ் ராஜ்ஷாபி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். முத்தியால்பேட்டை போலீசார் வழக்குபதிந்து உதவி கணக்கு அதிகாரி மர்ம மரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.