

புதுச்சேரி:
புதுச்சேரி கோரிமேடு சஞ்சீவி நகர் தனியார் விடுதியில் விசா முடிந்தும் அவர்களது நாட்டிற்கு செல்லாமல் 6 பேர் தங்கியிருப்பதாக, புதுச்சேரி குடியேற்ற பணியகம் (இமிக்கிரேஷன்) மண்டல பதிவு அலுவலர் ராமச்சந்திரன் கோரிமேடு போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் விடுதியில் தங்கியிருந்த 6 பேரிடம் விசாரணை நடத்தினர்.
அதில் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த ஒருவர் புதுச்சேரியில் தங்கி படித்து வருகிறார் என்பதும் அவரை பார்க்க உறவினர்களான ஆப்பிரிக்கா உகாண்டாவை சேர்ந்த மஸ்துலா பார்பி கான் சீம், ககாய் ஷாடியா, தான்சானியாவை பகுதியை சேர்ந்த டெல்வின் ஐஸ்டின் தாரிமோ, காட்வின் ஆண்டனி சுகவு, பேபியன் சபினா பால், களங்கு மரியம் இசா ஆகியோர் புதுச்சேரிக்கு வந்தது தெரியவந்தது.
விசா காலம் முடிந்தும் அவர்கள் தங்களது நாட்டிற்கு செல்லாமல் கடந்த 8 ஆண்டுகளாக புதுச்சேரியில் தங்கியிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.