தினசரி 95 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை - மத்திய மந்திரி ஹர்சவர்தன் தகவல்

இந்தியாவில் தினசரி 95 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்கிற அளவுக்கு திறன் அதிகரித்துள்ளது என மத்திய மந்திரி ஹர்சவர்தன் கூறினார்.
மத்திய மந்திரி ஹர்சவர்தன்
மத்திய மந்திரி ஹர்சவர்தன்
Published on

புதுடெல்லி:

வட கிழக்கு மாநிலங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் எப்படி இருக்கிறது, தடுப்பு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன என்பதை உயர்மட்ட கூட்டம் நடத்தி டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்சவர்தன் நேற்று ஆய்வு செய்தார்.

அவர் கொரோனா வைரசுக்கு எதிரான போரில், அசாம், அருணாசலபிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, திரிபுரா மற்றும் சிக்கிம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களின் பங்களிப்பை பாராட்டினார்.

தொடர்ந்து அவர் கூறியதாவது:-

வட கிழக்கு மாநிலங்களில் பெரும்பாலானவற்றில் பச்சை மண்டலங்களை பார்க்கிறபோது அது மிகப்பெரிய ஆறுதலாகவும், ஊக்கம் தருவதாகவும் அமைந்துள்ளது. அசாமிலும், திரிபுராவிலும்தான் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுகின்றனர். பிற மாநிலங்கள் பச்சை மண்டலத்தில் உள்ளன. ஆரஞ்சு மண்டலங்களை நாம் பச்சை மண்டலங்களாக மாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

நமது நாட்டில் கொரோனா வைரஸ் பரிசோதனை வசதியானது, தினசரி 95 ஆயிரம் பேருக்கு செய்யத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. 332 அரசு மற்றும் 121 தனியார் ஆய்வுக்கூடங்கள் இதை மேற்கொள்கின்றன. இதுவரை கொரோனா வைரஸ் பரிசோதனை 15 லட்சத்து 25 ஆயிரத்து 631 பேருக்கு நடத்தப்பட்டுள்ளது.

வட கிழக்கு மாநிலங்களில் தற்போதைய சாதகமான நிலையை தக்க வைத்துக்கொள்வதற்கு, இடம் பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள், வெளிநாட்டில் இருந்து திரும்புவோர் விதிமுறைகளின்படி தனிமைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு பொது இடங்களில் எச்சில் துப்புவதையும், புகையிலை மெல்லுவதையும் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாநிலங்களை அவர் கேட்டுக்கொண்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com