

பிரதமரை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டுள்ள நெல்லைக் கண்ணன் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
அதில், மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி நெல்லை மேலப்பாளையத்தில் நடந்த மாநாட்டில் நான் பேசியபோது பிரதமர் மோடி குறித்தும், பா.ஜ.க. தலைவர் அமித்ஷா குறித்தும் அவதூறாக பேசியதாகக்கூறி பல இடங்களில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட பேச்சு வழக்கிலேயே “ஜோலியை முடிக்கலியா?” என பேசப்பட்டது. அதன் பொருள் வேலை. அதாவது அரசியலில் பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷாவின் ஆட்சியை முடிவுக்கு கொணரவில்லையா? எனும் நோக்கிலேயே அவ்வாறு பேசப்பட்டதே தவிர, உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் நோக்கில் அல்ல.
ஆனால் அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, என் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆகவே என் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” என கூறியுள்ளார்.