

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தின், சாகன் பகுதியில் உள்ள மேம்பாலம் அருகே பெண் ஒருவரின் உடல் கடப்பதாக குடியிருப்புவாசிகள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை பெண்ணின் உடலை கைப்பற்றி, விசாரணையைத் தொடங்கினர். முதலில் இது கொலையாக இருக்கலாம் என சந்தேகித்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதிகாலை 2 மணிக்கு தெருநாய்களால் அவர் தாக்கப்பட்டது கண்டறியப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அப்பெண் தனியாக நடந்து செல்லும்போது இரண்டு நாய்கள் கடிக்க வந்துள்ளன.
உடனே அவர் அருகில் கிடந்த கல்லை கையில் எடுத்துள்ளார். அதற்குள் அங்கிருந்த மற்ற நாய்கள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து அவரை தாக்கியது. கிட்டத்தட்ட 15 நிமிடங்களுக்கு மேலாக அப்பெண்ணை 5க்கும் மேற்பட்ட நாய்கள் தாக்கியுள்ளன.
இதில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தொடர்ந்து இந்த வழக்கில் சாகன் காவல்துறை விபத்து மரண அறிக்கையை பதிவு செய்தது.
இதுதொடர்பாக பேசிய சாகன் மூத்த காவல் ஆய்வாளர் ஜிதேந்திர கதம்,
“அந்தப் பெண் நாந்தேடு பகுதியைச் சேர்ந்தவர். வேலை தேடி சில மாதங்களுக்கு முன்பு புனேவிற்கு குடிபெயர்ந்தார். அவர் ஒரு தனியார் இடத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அவருக்குத் திருமணமாகிவிட்டது, ஆனால் தற்போது கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.
அவர் தெருநாய்கள் தாக்கியதில் உயிரிழந்ததை சிசிடிவி காட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன. இச்சம்பவம் குறித்து சாகன் நகராட்சி நிர்வாகத்திற்குத் தெரிவித்துள்ளோம், மேலும் அப்பகுதியில் உள்ள தெருநாய்களுக்கு ஒரு தீர்வு காணவும் அவர்களை கேட்டுக் கொண்டுள்ளோம்.”
என தெரிவித்தார்.
இறந்தவர் நாந்தேடு மாவட்டத்தில் உள்ள, டெக்லூர் பகுதியைச் சேர்ந்த ஷோபா விஜய் வாக்மரே (32) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.