

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. சுவேந்து அதிகாரி முதல்வர் ஆனார்.
மேற்கு வங்கத்தில் பாஜக முதல் முதலில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில் பல மாற்றங்களை செய்து வருகிறது.
அந்த வகையில் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மதிய உணவுத் திட்டத்திலிருந்து முட்டைகளை நீக்க மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது.
மதிய உணவுத் திட்டத்தின் கீழ், மத அமைப்பான இஸ்கானின் அன்னமித்ரா அறக்கட்டளை சமைத்த சைவ உணவு மட்டுமே வழங்கப்படும் என மேற்கு வங்க அரசு அறிவித்ததை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்கானின் கொல்கத்தா செய்தித் தொடர்பாளர் ராதராமன் தாஸ் பேசுகையில், உணவில் முட்டைகள் இடம்பெறாது என்றும் அதற்குப் பதிலாக, பனீர், ராஜ்மா, சோயாபீன்ஸ், பருப்பு வகைகள் மற்றும் பிற சைவப் புரத மூலங்கள் போன்ற பொருட்கள் அதில் சேர்க்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இஸ்கான் ஏற்கனவே எட்டுக்கும் மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் 22 நகரங்களில் இது போன்ற மதிய உணவுத் திட்டங்கள் மூலம் சுமார் 12 லட்சம் மாணவர்களுக்கு உணவளித்து வருவதாக அவர் கூறினார்.
மேற்கு வங்கத்தில் தற்போதுள்ள நடைமுறையின்படி, மாணவர்களுக்கு வாரத்திற்கு ஒரு முறை முட்டைகள் வழங்கப்படுகின்றன.
மற்ற பள்ளி நாட்களில் சாதம், பருப்பு வகைகள், பருப்பு சூப் மற்றும் உருளைக்கிழங்கு கூழ் ஆகியவை வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் உணவில் இருந்து முட்டை நீக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
புதிய அரசாங்கம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை மறுப்பதாகவும், மாநிலத்தில் சைவ உணவைத் திணிக்க முயற்சிப்பதாகவும் திரிணாமூல் காங்கிரஸ் இணைச் செயலாளர் டெரெக் ஓ'பிரையன் பாஜகவைக் கடுமையாகச் சாடியுள்ளார்.