

உத்தரப் பிரதேசத்தின் பிரதான எதிர்க்கட்சியாக சமாஜ்வாதி உள்ளது. இக்கட்சியை நிறுவியவர் முலாயம் சிங் யாதவ்.
இவர் 90களிலும், 2003 முதல் 2007 காலகட்டத்தில் உத்தரப் பிரதேச முதல்வராக செயல்பட்டார்.
மேலும் பலமுறை எம்.பி.யாகவும், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். கடந்த 2022 இல் அவர் இயற்கை எய்தினார்.
முலாயம் சிங் யாதவ் உடைய முதல் மனைவியின் மகன் அகிலேஷ் யாதவ் தற்போது சமாஜ்வாதி தலைவராகவும் மக்களவை எம்.பி.யாகவும் உள்ளார்.
இந்நிலையில் முலாயம் சிங் யாதவின் இளைய மகனும், அகிலேஷ் யாதவின் ஒன்றுவிட்ட சகோதரருமான பிரதீக் யாதவ் (38) இன்று லக்னோவில் அகால மரணமடைந்தார்.
சில காலமாக நுரையீரல் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த பிரதீக், நுரையீரலில் ஏற்பட்ட இரத்த உறைவுக்காக சிகிச்சை பெற்று வந்தார்.
உடல்நகுறைவால் அவதிப்பட்ட பிரதீக்கை, இன்று காலை 6:15 மணிக்கு குடும்பத்தினர் லக்னோ சிவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இருப்பினும், மருத்துவர்கள் ஏற்கனவே அவரது மரணத்தை உறுதி செய்திருந்தனர்.
மரணத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறிய பிரேதப் பரிசோதனை நடைபெற உள்ளது.
சில நாட்களுக்கு முன்பு, அவர் தனது மனைவி அபர்ணா யாதவை விவாகரத்து செய்யப் போவதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
அபர்ணா சுயநலவாதி என்றும், தனது குடும்ப உறவுகளைச் சிதைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இருப்பினும், சில நாட்களுக்குள் அவர்கள் மீண்டும் உறவைப் புதுப்பித்துக் கொண்டதாகப் பின்னர் அவர் மற்றொரு அறிக்கையை வெளியிட்டார்.
2011ல் திருமணம் செய்து கொண்ட பிரதீக் மற்றும் அபர்ணா தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பிரதீக்கின் மரணம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.