

உத்தரப் பிரதேசத்தில் பெற்ற மகள்களையே தந்தை கொலை செய்த பயங்கரம் அரங்கேறியுள்ளது.
கான்பூரை சேர்ந்த 48 வயதான சசி ரஞ்சன் மிஸ்ரா என்பவர், தனது 11 வயது இரட்டை மகள்களான ரித்தி மற்றும் சித்தி ஆகியோரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார்.
நேற்று அதிகாலை 4:30 மணியளவில், சசி ரஞ்சன் மிஸ்ராவே காவல்துறையின் அவசர எண்ணிற்கு அழைத்து, தான் தனது மகள்களைக் கொலை செய்துவிட்டதாகத் தகவல் தெரிவித்துள்ளார்.
போலிசார் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, அந்த இரண்டு சிறுமிகளும் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். சசி ரஞ்சன் அங்கேயே இருந்துள்ளார். உடனடியாக அவர் கைது செய்யப்பட்டார்.
பீகாரைச் சேர்ந்த சசி ரஞ்சன், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரேஷ்மா என்பவரை 2014ல் திருமணம் செய்துகொண்டார்.
தனது மனைவிக்குத் தவறான உறவு இருப்பதாகச் சசி ரஞ்சன் சந்தேகப்பட்டுள்ளார். இதனால் அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது.
சசி ரஞ்சன் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகவும், வீட்டின் அனைத்து அறைகளிலும் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தித் தன்னை எப்போதும் கண்காணித்து வந்ததாகவும் ரேஷ்மா கூறியுள்ளார்.
தனது மகள்களின் அறைக்குள் கூடத் தன்னை நுழைய அவர் அனுமதிப்பதில்லை என்று தெரிவித்துள்ளார்.