ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

ஆன்லைன் விளையாட்டில் அதிக அளவில் பணத்தை இழந்து விட்டேன்.எனக்கு திருமணம் செய்து வைக்க எனது பெற்றோர் பெண்ணை பார்த்து நிச்சயம் செய்து திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
Published on

தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணா (வயது 28). இவர் கடந்த 2018-ம் ஆண்டு போலீஸ் வேலையில் சேர்ந்தார். பாலகிருஷ்ணா ஆன்லைன் விளையாட்டில் ஏராளமான பணத்தை இழந்து வந்தார்.

இதனால் உறவினர்கள், நண்பர்களிடம் பணத்தை கடன் வாங்கினார். ரங்கா ரெட்டி கலெக்டர் அலுவலகத்தில் பாலகிருஷ்ணாவுக்கு பாதுகாப்பு பணி வழங்கப்பட்டது. நேற்று அதிகாலை பணி முடிந்து வீட்டுக்கு செல்ல வேண்டிய நேரத்தில் தன்னுடன் பணியாற்றும் போலீசாரிடம் கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

பாலகிருஷ்ணா கழிவறைக்குச் சென்ற சிறிது நேரத்தில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. போலீஸ்காரர்கள் கழிவறைக்கு சென்று பார்த்தனர்.

அப்போது பாலகிருஷ்ணா தன்னுடைய துப்பாக்கியை தொண்டையில் வைத்து சுட்டுக் கொண்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். தொண்டையில் பாய்ந்த துப்பாக்கி குண்டு தலை வழியாக வெளியே வந்து கழிவறையின் மேற்கூரையை தகர்த்து இருந்தது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டன. அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பாலகிருஷ்ணாவின் உடலை மீட்டனர். அப்போது அவரது சட்டை பாக்கெட்டில் உருக்கமான கடிதம் ஒன்று இருந்தது.

அதில் தான் ஆன்லைன் விளையாட்டில் அதிக அளவில் பணத்தை இழந்து விட்டேன். 3 பேரிடம் ரூ 2.80 லட்சம் கடன் வாங்கி திருப்பி தர முடியவில்லை.

மேலும் எனக்கு திருமணம் செய்து வைக்க எனது பெற்றோர் பெண்ணை பார்த்து நிச்சயம் செய்து திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

என்னால் என்னை திருமணம் செய்து கொள்ளும் பெண் பாதிக்கப்படக்கூடாது. இந்த காரணங்களுக்காக தற்கொலை செய்து கொள்கிறேன்.

இவ்வாறு கடிதத்தில் எழுதி இருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com