search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இரண்டாவது கட்ட வேட்பாளர்களை தேர்வு செய்ய பிரதமர் மோடி இன்று இரவு ஆலோசனை
    X

    இரண்டாவது கட்ட வேட்பாளர்களை தேர்வு செய்ய பிரதமர் மோடி இன்று இரவு ஆலோசனை

    • தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஏற்கனவே 39 தொகுதி வேட்பாளர்கள் பட்டியலை தயாரித்து டெல்லி மேலிடத்திடம் கொடுத்து இருக்கிறார்.
    • தமிழகத்தில் முக்கிய தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்கள் பற்றிய விவரங்கள் நாளை அல்லது நாளை மறுநாள் தெரிய வாய்ப்புள்ளது.

    புதுடெல்லி:

    தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பு வேட்பாளர்களில் ஒரு பகுதியினரை அறிவிப்பதை பாரதிய ஜனதா கடைபிடித்து வருகிறது.

    அதன்படி கடந்த 2-ந்தேதி பா.ஜ.க. சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 195 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்பட பல பிரபலங்கள் அந்த முதல் பட்டியலில் இடம் பெற்று இருந்தனர்.

    இந்த நிலையில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 2-வது பட்டியலை நாளை அல்லது நாளை மறுநாள் வெளியிட பா.ஜ.க. மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த பட்டியலில் இடம் பெற இருக்கும் வேட்பாளர்கள் பற்றி டெல்லியில் இன்று பாரதிய ஜனதா கட்சியின் மத்திய தேர்தல் குழு கூடி இறுதி முடிவு எடுக்கிறது.

    பிரதமர் மோடி தலைமையில் இன்று இரவு நடக்கும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பா.ஜ.க. தலைவர் நட்டா, அமித்ஷா மற்றும் மூத்த தலைவர்கள் பா.ஜ.க. மாநில தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மாநிலம் வாரியாக ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் பட்டியலை வைத்து ஆலோசித்து வேட்பாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    கடந்த முறை முதல் வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்பட்ட போது பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் இரவு 11 மணிக்கு தொடங்கி அதிகாலை வரை விடிய விடிய ஆலோசனை நடத்தினர். அதுபோல இன்று இரவும் நீண்ட நேரம் ஆலோசனை கூட்டம் நடக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    மத்திய மந்திரி சபையில் இருக்கும் மந்திரிகளில் சிலர் மேல்சபை எம்.பி.களாக உள்ளனர். அவர்களை இந்த தடவை தேர்தலில் போட்டியிட வைப்பது பற்றி இன்று நடக்கும் மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது. குறிப்பாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை எந்த தொகுதியில் போட்டியிட வைக்கலாம் என்பது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படுகிறது.

    2-வது பா.ஜ.க. வேட்பாளர் பட்டியலில் 150 பேர் வரை இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் பெரும்பாலான வேட்பாளர்கள் பீகார், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

    சில மாநிலங்களில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு செய்வதில் பா.ஜ.க.வுக்கு தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த இடங்களில் வேட்பாளர்கள் அறிவிப்பு சற்று தாமதம் ஆகும் என்று கூறப்படுகிறது.

    2-வது வேட்பாளர் பட்டியலில் மத்திய மந்திரிகள் நிதின்கட்கரி, அஸ்வினி சவ்பே, ஆர்.கே.சிங், நித்தியானந்தாராய் ஆகியோர் பெயர்கள் இடம்பெறும் என்று தெரிகிறது. குஜராத், மத்திய பிரதேசம், பீகார், தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் பா.ஜ.க. தலைவர்கள் கூட்டம் நேற்று நடந்தது. அதில் எடுக்கப்பட்ட வேட்பாளர் தேர்வு பற்றியும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

    முதல் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்ற சிலர் போட்டியிட தயக்கம் காட்டினார்கள். சில வேட்பாளர்கள் மீது சர்ச்சை எழுந்தது. எனவே அத்தகைய சர்ச்சைகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு வேட்பாளரையும் இன்று அலசி ஆராய உள்ளனர்.

    குறிப்பாக இன்று வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட உள்ளவர்களின் பின்னணியில் எந்தவித சர்ச்சையும் இருக்க கூடாது என்பதில் பிரதமர் மோடி உறுதியாக இருக்கிறார்.


    தமிழ்நாட்டில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்கள் பற்றியும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஏற்கனவே 39 தொகுதி வேட்பாளர்கள் பட்டியலை தயாரித்து டெல்லி மேலிடத்திடம் கொடுத்து இருக்கிறார். இன்று அவர் டெல்லி செல்கிறார்.

    அவர் முன்னிலையில் 39 தொகுதி வேட்பாளர்கள் பற்றி அலசி ஆராயப்பட உள்ளது. அதில் 7 அல்லது 8 தொகுதி வேட்பாளர்கள் பெயர் விவரம் 2-வது பட்டியலில் இடம்பெறும் என்று தெரிகிறது. எனவே தமிழகத்தில் முக்கிய தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்கள் பற்றிய விவரங்கள் நாளை அல்லது நாளை மறுநாள் தெரிய வாய்ப்புள்ளது.

    மேலும் 2-வது வேட்பாளர் பட்டியலில் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்க பா.ஜ.க. மூத்த தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களில் உள்ள சிறுபான்மை இன கட்சி நிர்வாகிகளுக்கு பா.ஜ.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

    Next Story
    ×