வாரணாசியில் 2 நாட்கள் சுற்றுப்பயணம்: பிரதமர் மோடி 'மிஷன்-2024' பாராளுமன்ற தேர்தல் பிரசாரம்

வாரணாசி தொகுதியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் பிரதமர் மோடி ரூ.1,000 கோடி மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.பிரதமர் மோடி சுற்றுப் பயணத்தின் போது, ​​கங்கை நதியில் நடைபெறும் பிரமாண்ட கங்கா ஆரத்தியையும் காண இருப்பதாக பா.ஜ.க.வினர் தெரிவித்துள்ளனர்.
வாரணாசியில் 2 நாட்கள் சுற்றுப்பயணம்: பிரதமர் மோடி 'மிஷன்-2024' பாராளுமன்ற தேர்தல் பிரசாரம்
Published on

லக்னோ:

பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வரும் தேசியக்கட்சிகள் தற்போது முதலே அதற்கான நடவடிக்கைகளில் முழுவீச்சில் இறங்கியுள்ளன. இதற்கிடையே சமீபத்தில் நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற்ற மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் ஆட்சி அமைக்கும் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது மக்களவைத் தொகுதியான வாரணாசியில் இருந்து புனித தலத்துக்குச் சென்று 'மிஷன் -2024' என்ற ரீதியில் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தையும் தொடங்க இருக்கிறார்.

இதற்காக பிரதமர் மோடி வருகிற 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் வாரணாசியில் சுற்றுப்பயணம் செய்கிறார். வருகிற ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் காசிக்கு வரக்கூடிய அவர், தனது பாராளுமன்றத் தொகுதியில் இரவு தங்குகிறார். மறுநாள் திங்கட்கிழமை கட்சி மற்றும் அரசு விழாக்களில் கலந்து கொள்கிறார்.

வாரணாசி தொகுதியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் பிரதமர் மோடி ரூ.1,000 கோடி மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து வாரணாசி கோட்ட ஆணையர் கவுஷல் ராஜ் சர்மா கூறுகையில், பிரதமர் மோடி காசியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைப்பதுடன் தொடர் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க உள்ளார் என்றார்.

அதேபோல் காசி தமிழ் சங்கமம், உலகின் மிகப் பழமையான கலாச்சார பாரம்பரியத்தின் வாழ்க்கைப் பிணைப்புகளை புதுப்பிக்க மத்திய கல்வி அமைச்சகத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்டது. மத்திய கல்வி அமைச்சகம், கலாச்சாரம், ஜவுளி, ரெயில்வே போன்ற பிற துறைகளுடன் இணைந்து இதற்கு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த காசி தமிழ்ச் சங்கமத்தில், இந்தியாவின் வடக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களுக்கிடையேயான வரலாற்று மற்றும் குடிமைத் தொடர்பின் பல பகுதிகள் கலாச்சார மரபுகளை நெருக்கமாக கொண்டு, பகிர்வு பற்றிய புரிதலை உருவாக்கும் நோக்கத்துடன் கொண்டாடப்படுகின்றன.

காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள பழமையான தொடர்புகளை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் இந்த சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதன் இரண்டாம் கட்ட விழா வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது. அதிலும் பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார் என்றார்.

மேலும் பிரதமர் மோடி இந்த சுற்றுப் பயணத்தின் போது, கங்கை நதியில் நடைபெறும் பிரமாண்ட கங்கா ஆரத்தியையும் காண இருப்பதாக பா.ஜ.க.வினர் தெரிவித்துள்ளனர். முன்னதாக பிரதமர் மோடி தனது பயணத்தின் முதல் நாளில், கல்லூரி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நினைவு சின்னங்களுக்கு இடையேயான விக்சி பாரத் சங்கல்ப் யாத்ரா கண்காட்சியை திறந்து வைக்கிறார்.

மோடி வருகையையொட்டி வாரணாசியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com