

தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலிலிருந்து ஒருவரது பெயரை நீக்கிவிட்டது என்பதற்காக, அந்த நபர் இந்தியக் குடிமகன் அல்ல என்று கூறிவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பீகாரில் குடியுரிமையில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, எஸ்ஐஆர் மூலம் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டவர்களின் மனுவை தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது பேசிய அவர்கள், "வாக்காளர் பட்டியலில் சட்டப்பூர்வமாக ஒருவரது பெயரைச் சேர்ப்பதற்கான தகுதிகள் குறித்து தேர்தல் ஆணையம் திருப்தி அடையவில்லை என்பதை மட்டுமே இந்த நீக்கம் காட்டுகிறது.
இது வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதற்கும், அதன் மூலம் தேர்தலில் வாக்களிப்பதற்குமான ஒரு தனிநபரின் உரிமையை மட்டுமே தற்காலிகமாகப் பாதிக்கும்.
அதே நேரத்தில், இந்தியக் குடிமகன் என்ற முறையில் ஒரு நபருக்குக் கிடைக்க வேண்டிய மற்ற அடிப்படை உரிமைகளைப் பறிக்க இது ஒருபோதும் காரணமாக அமைந்துவிடக் கூடாது.
மேலும், குடியுரிமைச் சட்டத்தின்படி குடியுரிமை தொடர்பான தகுதிவாய்ந்த அதிகார அமைப்பின் முன் நிலுவையில் இருக்கும் ஒருவரது வழக்கைப் பாதிக்கவும் கூடாது." என்று தெரிவித்தனர்.
பீகாரில் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டவர்களின் குடியுரிமையை முழுமையாக ஆய்வு செய்து அவர்கள் இந்தியக் குடிமக்கள் தான் என்பது உறுதி செய்யப்பட்டால், அவர்களின் பெயர்களை உடனடியாக மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1955ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தின்படி இவர்களின் குடியுரிமைத் தகுதியை மத்திய அரசு இறுதி செய்ய வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.