

17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இந்திய மன்னர் சத்ரபதி சிவாஜி மராட்டியத்தில் பேரடையளமாக திகழ்கிறார்.
1674ல் சத்ரபதி சிவாஜியின் முடிசூட்டு விழாவை நினைவுகூரும் வகையில் சிவராஜாபிஷேக தினம் ஆண்டுதோறும் ஜூன் 6 ஆம் தேதி கொண்டாப்படுகிறது.
இந்தாண்டு கொண்டாட்டங்களை ஒட்டி மும்பையில் உள்ள இஸ்ரேல் இணை தூதர் யனவ் ரெவாச், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்க்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பினார்.
அதில் இரு நாட்டு கலாச்சார, ராஜதந்திர இணைப்பை போற்றும் வகையில் மன்னர் சிவாஜியின் சிலையை இஸ்ரேலில் உள்ள ஒரு பெரிய நகரில் விரைவில் நிறுவ உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்தியாவை கடந்து சிவாஜிக்கு சிலை அமைக்கப்படுவது இது முதல் முறை அல்ல. மொரிஷியஸ், அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் அவரது நினைவாக சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால் இஸ்ரேல் சிலை அமைப்பதன் பின்னணியில் ஒரு வரலாற்று தொடர்பு உள்ளது.
மராட்டியத்தின் கொங்கன் பகுதியில் பெனே இஸ்ரேல் என்ற சமூகம் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருகிறது. கி.மு 175 -இல் படகில் பயணித்தபோது விபத்து ஏற்பட்டு, இந்த சமூகத்தினர் சிலர் மராட்டியத்தின் கொங்கன் பரப்பில் அமைந்துள்ள கடலோர நகரமான அலிபாக் அருகில் உள்ள நவகான் என்ற இடத்திற்கு உடைந்த படகில் வந்து சேர்ந்தனர்.
இவர்கள் அங்கேயே தங்கி, உள்ளூர் மக்களுடன் ஒன்றுபட்டு பல நூற்றாண்டுகளாக மராட்டிய கலாச்சாரம், மொழியை ஏற்று வாழ்ந்து வருகின்றனர். இந்த சமூகத்தை சேர்ந்த பலர் மன்னர் சிவாஜியின் ராணுவத்தில் இருந்ததாகவும் சிவாஜியின் ஆட்சி காலத்தில் இவர்கள் அரவணைக்கப்பட்டதாவதும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே இந்த வரலாற்று ரீதியான யூத - இந்திய இணைப்பை போற்றும் விதமாக, தற்போதைய இரு நாட்டு உறவை போற்றும் விதமாக மன்னர் சிவாஜிக்கு சிலை அமைக்க இஸ்ரேல் முன்வந்துள்ளது.