3 நாள் அரசு முறைப் பயணமாக நாளை செஷல்ஸ் செல்கிறார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி ஏற்கனவே 2015-ஆம் ஆண்டு செஷல்ஸ் நாட்டுக்கு சென்றிருந்தார்.
Prime Minister Narendra Modi visit to Seychelles
Published on

பிரதமர் மோடி நாளை (சனிக்கிழமை) 3 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான செஷல்ஸ் நாட்டுக்கு செல்கிறார்.

செஷல்ஸ் நாட்டின் 50-ம் ஆண்டு தேசிய தினம் வருகிற 29-ந்தேதி நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி தலைமை விருந்தினராக பங்கேற்கிறார்.

இந்தியக் கடற்படையின் 2 கப்பல்கள் மற்றும் பாதுகாப்புப் படைப் பிரிவினர் இந்த தேசிய தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்கின்றனர்.

இந்த பயணத்தின்போது செஷல்ஸ் அதிபர் பேட்ரிக்குடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்துகிறார்.

மேலும், செஷல்ஸ் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் பிரதமர் மோடி அங்குள்ள இந்திய வம்சாவளியினரிடம் கலந்துரையாடுகிறார். வரலாறு, கலாசாரம், மக்கள் ரீதியிலான தொடர்புகளில் இந்தியாவும், செஷல்சும் நீண்டகால கூட்டுறவைக் கொண்டுள்ளன. பிரதமரின் தற்போதைய பயணம், இருதரப்பு வலுவான, நீடித்த உறவை மீண்டும் உறுதி செய்வதுடன், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த உதவும்’ என்று மத்திய வெளியுறவு அமைச்சரகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி ஏற்கனவே 2015-ஆம் ஆண்டு செஷல்ஸ் நாட்டுக்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரவேற்பு பதாகை

செசல்ஸ் நாட்டின் தேசிய தின பொன்விழா கொண்டாட்டங்களில் பங்கேற்க செல்லும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் விதமாக, அந்நாட்டின் இந்திய வம்சாவளியினர் விக்டோரியா- மாஹே மற்றும் இந்திய தூதரகம் அமைந்துள்ள பகுதிகளில் பிரமாண்ட வரவேற்பு பதாகைகளை அமைத்துள்ளனர்.

அதில் ஒரு பதாகையில் இந்தியா மற்றும் செசல்ஸ் நாட்டு கொடிகள் இடம் பெற்றுள்ளன. நடுவில் பிரதமர் மோடி உள்ளார். மற்றொரு பதாகையில் மோடியின் படம் மட்டும் இடம்பெற்று உள்ளது. அவரை வரவேற்று வாசகம் இடம்பெற்றுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com