search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரதமர் 2 நாள் அசாம் பயணம்: பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்
    X

    பிரதமர் 2 நாள் அசாம் பயணம்: பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

    • தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கில் நிலையில் பல்வேறு மாநிலங்களில் சுற்றுப் பயணம்.
    • தமிழ்நாடு, தெலுங்கானா, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் சுற்றுப் பயணம் செய்துள்ளார்.

    மக்களவை தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களில் சுற்றுப் பயணம் செய்து பல்லாயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார்.

    தமிழ்நாடு, தெலுங்கானா, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் சுற்றுப் பயணத்தை முடித்துள்ளார். இன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலம் செல்கிறார்.

    இந்த நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்கள் அசாம் மாநிலத்தில் சுற்றுப் பயணம் செய்து 3,992 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவடைந்த திட்டங்களை திறந்து வைக்கிறார். மேலும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த தகவலை அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடி வருகை குறித்து அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறியதாவது:-

    நாளை மாலை 4 மணிக்கு தேஸ்பூர் விமான நிலையம் வந்து இறங்குகிறார். விமான நிலையத்தில் இருந்து நேராக காஸிரங்கா செல்கிறார். அங்கு தங்கும் பிரதமர் மோடி, 9-ந்தேதி (சனிக்கிழமை) காலை 5.30 மணிக்கு காஸிரங்கா தேசிய பூங்கா செல்கிறார். அங்கு இரண்டு மணி நேரம் இயற்கை சூழல் கொண்ட பூங்காவை சுற்றிப் பார்க்கிறார். காஸிரங்காவில் இருந்து அருணாச்சல பிரதேசம் செல்கிறார்.

    அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு 1.30 மணியளவில் அசாம் மாநிலம் ஜோர்ஹாத் திரும்புகிறார்.

    திக்போய் சுத்திகரிப்பு நிலையம் விரிவாக்க பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த சுத்திகரிப்பு நிலையம் 768 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. அதேபோல் 510 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ள கவுகாத்தி சுத்திகரிப்பு நிலையம் விரிவாக்க பணிக்கும் அடிக்கல் நாட்டுகிறார். பராயுனி முதல் கவுகாத்தி வரையிலான 3992 கோடி ரூபாய் மதிப்பிலான பைப்லைன் திட்டத்தை திறந்து வைக்கிறார்.

    பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகளை திறந்து வைக்கிறார். சிவசாகர் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், ஜோர்ஹாட்டில் உள்ள மெலெங் மெத்தேலி போதரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

    Next Story
    ×