

அரசியல் ஆதாயம் பெறுவதற்காக, வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்களை ஆபத்திற்கு உள்ளாக்கக்கூடிய ஆபத்தான கருத்துகளை கூறியதாக காங்கிரஸ் கட்சியை பிரதமர் மோடி கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி பதில் பதில் அளித்துள்ளார். அவர் பதில் பின்வருமாறு:-
மேலிருந்து குண்டுகள் மழையெனப் பொழிவதால், மேற்கு ஆசிய நாடுகளில் உள்ள இந்தியர்கள் ஆபத்தில் உள்ளனர். இதை சமாளிக்க பிரதமர் மோடி என்ன செய்து கொண்டிருக்கிறார்? மக்களை ஆபத்திலிருந்து மீட்டு வெளியே கொண்டுவருவதற்கான திட்டம் என்ன? இத்தகைய விஷயங்கள் குறித்தும், போர் குறித்தும் அரசியல் செய்வது முறையல்ல.
இவ்விசயத்தில் நாங்கள் அனைவரும் ஒருமித்த கருத்தை கொண்டுள்ளோம். ஒட்டுமொத்த நாடும் ஒற்றுமையுடன் திகழ்கிறது. ஆயினும், மோதல் காரணமாக எழும் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதனால்தான், நாடாளுமன்றத்தில் இதுகுறித்த விவாதம் நடைபெறவும், அதன் வாயிலாக நாங்கள் எங்கள் ஆலோசனைகளை முன்வைத்து ஒரு தீர்வை எட்டவும் நாடாளுமன்றத்தில் விவாதத்தை கோருகிறோம்.
இப்போர் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், நெருக்கடிகள் மேலும் தீவிரமடைந்து வருகின்றன. இன்று எரிவாயு சிலிண்டரின் விலை எவ்வளவோ உயர்ந்துவிட்டதால், அதை வாங்கும் நிலையில் யாரும் இல்லை. எதிர்காலத்தில் என்ன நிகழும்? பெட்ரோல் மற்றும் டீசலுக்குத் தட்டுப்பாடு ஏற்படும். அப்படியென்றால், அதைச் சமாளிப்பதற்கு அரசாங்கத்திடம் உள்ள திட்டம் என்ன?.
இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்தார்.