மின்சார வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கை- மத்திய மந்திரி நிதின் கட்கரி

நாட்டின் போக்குவரத்து அமைப்பை மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.மாற்று எரிபொருளை இந்தியா பயன்படுத்தும் நேரம் வந்து விட்டது.
நிதின் கட்கரி
நிதின் கட்கரி
Published on

மும்பை:

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின்கட்கரி மும்பையில் நேற்று அசோக் லேலண்ட் நிறுவனத்தின் இரட்டை அடுக்கு மின்சார பேருந்து சேவையை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், நமது நாட்டின் போக்குவரத்து அமைப்பை மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றார்.

மாநகர போக்குவரத்து அமைப்பை சீரமைக்கும் நோக்கில் குறைந்த கார்பன் வெளியீடு மற்றும் அதிக பயணிகளை ஏற்றிச்செல்லும் வகையிலான மின்சார வாகனங்களை உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். 

மின்சார வாகன பயன்பாட்டினை ஊக்கப்படுத்தும் விதமாக, மத்திய அரசின் கொள்கைகள் உள்ளதாகவும், மின்சார சொகுசுப் பேருந்துகள் மூலம் பயண நேரத்தைக் குறைப்பதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கச்சா எண்ணெய் இறக்குமதி அரசுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது என்றும், பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் 35 சதவீத காற்று மாசு ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

மின்சாரம், எத்தனால், மெத்தனால், உயிரி எரிபொருள் டீசல் ஆகிய மாற்று எரிபொருளை இந்தியா பயன்படுத்தும் நேரம் வந்துவிட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

ஆட்டோ மொபைல் வாகன எரிபொருளை பொருத்தவரை டீசலை விட, மின்சாரம் அதிக விலை கொண்டது என்றாலும் சூரிய சக்தி பயன்பாடு, மின்சாரத்திற்கான கட்டணத்தை வெகுவாக குறைத்துள்ளது என்றும் மத்திய மந்திரி நிதின் கட்கரி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com