

மே 3 நடந்த இளநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு, வினாத்தாள் கசிவு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து ரத்து செய்யப்பட்டது. ஜூன் 21 இல் மறுதேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்தது. மேலும் மே 3 தேர்வுக்கு பெறப்பட்ட கட்டணம் திருப்பி அளிக்கப்படும் எனவும் அறிவித்தது.
நேற்று(மே 21) இல் நீட் கட்டணம் திருப்பி அளிப்பு தொடங்கும் என கூறப்பட்ட நிலையில் இன்னும் அதற்கான இணைய நடைமுறையை தேர்வு முகமை தொடங்கவில்லை.
கட்டண விவரம்
பொதுப் பிரிவு மாணவர்கள் ரூ.1700, ஓபிசி பிரிவினர் ரூ.1600, எஸ்சி, எஸ்டி, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ரூ.1000, வெளிநாடு வாழ் இந்தியர்கள் ரூ.9500 செலுத்தியிருந்த நிலையில் அவர்கள் தங்கள் பணத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
விரைவில் தேர்வு முகமை, கட்டண திரும்பப் பெறுதலுக்கான இணைய லிங்க்-ஐ திறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி திறக்கும்பட்சத்தில் மாணவர்கள் கீழுள்ள நடைமுறையை பின்பற்றி தங்கள் பணத்தை திரும்பக்கோரலாம்.
நடைமுறை
தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் பணத்தை திரும்பப்பெறுவதற்கான லிங்க்-ஐ கிளிக் செய்து விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்.
வங்கி கணக்கு விவரத்தை உள்ளீடு செய்து IFSC குறியீடு மற்றும் கணக்கு வைத்திருப்பவரின் பெயரைச் சரிபார்த்த பின் பணத்தைத் திரும்பப்பெறும் படிவத்தை சமர்ப்பிக்கவும்.
படிவம் சமர்ப்பிக்கப்பட்டதற்கு ஆதாரமாக அந்த பக்கத்தை பதிவிறக்கம் செய்யவும். சரிபார்ப்புக்கு பின் உங்கள் வங்கிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்.