search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாலியல் பலாத்காரம் செய்பவர்களை மோடி காப்பாற்றுவார் - காங்கிரஸ் விமர்சனம்
    X

    பாலியல் பலாத்காரம் செய்பவர்களை மோடி காப்பாற்றுவார் - காங்கிரஸ் விமர்சனம்

    • மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தான் வென்ற விருதுகள் அனைத்தையும் ஒப்படைப்பதாக தெரிவித்தார்
    • இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் சரண் சிங் தனது பதவியில் இருந்து விலகினார்

    இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அச்சுறுத்தியதாக பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது குற்றம் சாட்டிய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நீண்ட காலமாக போராட்டம் நடத்தி வந்தனர்.

    இதன் காரணமாக இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் சரண் சிங் தனது பதவியில் இருந்து விலகினார்.

    இதனையடுத்து இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் தேர்தலில் பிரிஜ் பூஷணின் ஆதரவாளர்கள் போட்டியிட அனுமதி வழங்கக்கூடாது என்று மல்யுத்த வீராங்கனைகள் வலியுறுத்தினர். எனினும், தேர்தலில் களம் கண்ட பிரிஜ் பூஷணின் ஆதரவாளர் சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதை அறிந்து அதிர்ச்சி தெரிவித்த மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தங்களது பதக்கங்களை ஒப்படைப்பதாகவும், மல்யுத்தத்தில் இருந்தே விலகுவதாகவும் அறிவித்தனர்

    அந்த வரிசையில், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தான் வென்ற விருதுகள் அனைத்தையும் ஒப்படைப்பதாக தெரிவித்தார். இது தொடர்பாக அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார்.

    அந்த கடிதத்தில், "ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற கனவு கலைகிறது. ஒவ்வொரு பெண்ணும் கண்ணியத்துடன் வாழ விரும்புவர். ஆனால் கண்ணியத்துடன் வாழும் வாழ்க்கையில் விருதுகள் சுமையாக கூடாது என்பதால், நான் வாங்கிய விருதுகளை திரும்ப கொடுக்கிறேன்," என்று எழுதியிருந்தார்.

    இதனையடுத்து மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் தனது கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளை திருப்பி அளித்தார். தனது விருதுகளை பிரதமர் அலுவலகத்தில் ஒப்படைக்க முனைந்த அவருக்கு, தில்லி காவல்துறையினர் அனுமதி மறுத்து வழியிலேயே தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர் அந்த விருதுகளை பிரதமர் அலுவலகம் செல்லும் சாலையின் நடுவில் வைத்துவிட்டுத் திரும்பினார். பின்னர் காவல்துறையினர் அதை கைப்பற்றினர்.

    மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, வீரேந்தர் சிங் யாதவ் ஆகியோரும் தங்களது விருதுகளை திருப்பி அளித்துள்ளனர்.

    இந்நிலையில், இதை விமர்சிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் வினேஷ் போகத் படத்தை மோடி பார்க்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளது.

    அந்த பதிவில், என் உயிரை பணயம் வைத்து பாலியல் பலாத்காரம் செய்பவர்களை காப்பாற்றுவேன் என்று நரேந்திர மோடி கூறுகிறார் என்று பதிவிட்டுள்ளது.

    Next Story
    ×