

உத்தரப் பிரதேசத்தில் காலை நடைப்பயிற்சிக்குச் சென்ற மூத்த வழக்கறிஞர் ஒருவர், அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மிர்சாபூர், கத்ரா கோட்வாலியை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ராஜீவ் சிங், நேற்று (சனிக்கிழமை) காலை வழக்கம் போல் தனது நடைப்பயிற்சிக்குச் சென்றிருந்தார்.
அவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் அவரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர்.
ராஜீவ் சிங் தப்பிப்பதற்காக சிறிது தூரம் ஓடிய போதிலும், மர்ம நபர்கள் அவரை விடாமல் துரத்தி, மிக அருகில் இருந்து துப்பாக்கியால் சுட்டனர். கடுமையான இரத்தப்போக்கு காரணமாக அவர் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார்.
மக்கள் கூட்டம் நிறைந்த பகுதியில் இந்தக் கொலை நடந்ததால், உள்ளூர் மக்கள் பீதியடைந்தனர்.
தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், பிரேதப் பரிசோதனைக்காக உடலை அப்புறப்படுத்தினர்.
குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யக் கோரி வழக்கறிஞர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழைய பகை காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்ய மூன்று சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.