தேவகவுடாவின் சிந்தனையில் உதித்ததுதான் மேகதாது திட்டம்: குமாரசாமி

1962-ம் ஆண்டு முதல் முறையாக தேவகவுடா சுயேச்சையாக தேர்தலில் போட்டியிட்டு சட்டசபைக்கு வந்தார். அவர் நடத்திய போராட்டங்களின் விளைவாக கர்நாடகத்தில் இன்று காவிரி நீர் பயன்படுத்தப்படுகிறது.
குமாரசாமி
குமாரசாமி
Published on

பெங்களூரு :

ஜனதா தளம் (எஸ்) கட்சியின் மூத்த தலைவரான முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பிடதியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மதமாற்ற தடை சட்ட மசோதாவை ஜனதா தளம்(எஸ்) முழுமையாக எதிர்க்கிறது. மேல்-சபையிலும் இந்த மசோதாவை நாங்கள் எதிர்ப்போம். இதுகுறித்து எங்கள் கட்சியின் எம்.எல்.சி.க்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். மேகதாது திட்ட பணிகளை தொடங்க வலியுறுத்தி காங்கிரஸ் பாதயாத்திரை மேற்கொள்கிறது. இது நீருக்காக நடத்தப்படும் பாதயாத்திரை அல்ல, ஓட்டுக்காக நடத்தப்படும் பாதயாத்திரை ஆகும்.

நீர்ப்பாசனத்துறையில் தேவேகவுடாவின் சாதனையை காங்கிரசார் சற்று நினைத்து பார்க்க வேண்டும். தேவகவுடா பிரதமராக இருந்தபோது மேகதாது திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த திட்டம் தேவகவுடாவின் சிந்தனையில் பிறந்தது. நான் முதல்-மந்திரியாக இருந்தபோது இந்த திட்டத்திற்கான அறிக்கை தயாரிக்கப்பட்டது. இது தொடர்பாக பிரதமர், ஜல்சக்தி துறை மந்திரியை பலமுறை சந்தித்து பேசினேன்.

1962-ம் ஆண்டு முதல் முறையாக தேவகவுடா சுயேச்சையாக தேர்தலில் போட்டியிட்டு சட்டசபைக்கு வந்தார். அவர் நடத்திய போராட்டங்களின் விளைவாக கர்நாடகத்தில் இன்று காவிரி நீர் பயன்படுத்தப்படுகிறது. தேவகவுடாவின் முயற்சியால் தான் ஹேமாவதி, ஹாரங்கி அணைகள் கட்டப்பட்டன. இந்த விவரங்களை எல்லாம் அறிந்து காங்கிரசார் பாதயாத்திரை நடத்தினால் நல்லது.

இறைவன் அருளால் எனது மகன் நிகில் நடிகராகியுள்ளார். அவர் நடித்துள்ள ரைடர் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அவர் சிறந்த நடிகராக வேண்டும் என்பது விருப்பம்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com