

மாநிலங்களவையில் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலக்கட்டத்தில் 59 எம்.பி.க்கள் ஓய்வு பெறுகிறார்கள்.
இன்று அவையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உட்பட பல தலைவர்கள் தங்களது பிரியாவிடை உரைகளை ஆற்றினர்.
தனது உரையைத் தொடங்கிய கார்கே, "விடைபெறும் எண்ணம் என் இதயத்தை கனமாக்குகிறது. பொது வாழ்வில் பணியாற்றும் ஒருவர் ஒருபோதும் ஓய்வு பெறுவதில்லை. நான் ஒருபோதும் சோர்வடைவதில்லை.
54 ஆண்டுகள் நாடாளுமன்ற அனுபவம் இருந்தபோதிலும், எனக்கு இன்னும் கற்றுக்கொள்ள வேண்டிய தேவை இருப்பதாக உணர்கிறேன்.
பதவிகாலம் முடிந்து உறுப்பினர்களில் பலர் சபைக்குத் திரும்பி வந்து நாடாளுமன்ற ஜனநாயகத்தை தொடர்ந்து வலுப்படுத்துவார்கள்" என்று தெரிவித்தார்.
மேலும் தனது பிரியாவிடை உரையில், கார்கே கர்நாடகாவை சேர்ந்த முன்னாள் பிரதமர் மற்றும் இந்நாள் மாநிலங்களவை உறுப்பினர் எச்.டி. தேவகௌடாவை குறிப்பிட்டார்.
அவையில் இருந்த தேவகௌடாவை சுட்டிக்காட்டி கார்கே நகைச்சுவையாக, "எனக்கு தேவகௌடாவை 54 ஆண்டுகளாகத் தெரியும். அவர் எங்களுடன் இருந்தார், பிறகு எங்களை விட்டுப் பிரிந்து சென்றார்.
கௌடா எங்களை காதலித்துவிட்டு மோடியை திருமணம் செய்து கொண்டார்" என்றார். கார்கேயின் இந்தக் கருத்து பிரதமர் மோடியை வாய்விட்டுச் சிரிக்க வைத்தது. அவையில் இருந்த அனைவரும் சிரிப்பலையில் மூழ்கினர்.
கர்நாடகாவில் தேவகௌடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.