இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும்: சுவீடன் தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

சுவீடன்- இந்தியா இடையிலான தொழில் நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான வழித் தடத்தை உருவாக்குவதில் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம் என்றார் பிரதமர் மோடி.
இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும்: சுவீடன் தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
Published on

பிரதமர் மோடி, ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். முதலில் நெதர்லாந்துக்கு சென்ற அவர் அங்கிருந்து சுவீடனுக்கு சென்றார். அங்கு மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சுவீடன் பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சனுடன் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் வர்த்தகம், தொழில் நுட்பம், பாதுகாப்பு உள் ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

மேலும் இருநாடுகளின் உறவை உத்திசார் கூட்டாண்மை நிலைக்கு உயர்த்த முடிவு செய்தனர். மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான்டெர் லேயனுடனும் ஆலோசனை நடத்தினார். அதன் பின் உல்ப் கிறிஸ்டர்சன், உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோருடன் இணைந்து மோடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது மோடி கூறும்போது, சுவீடன்- இந்தியா இடையிலான தொழில் நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான வழித் தடத்தை உருவாக்குவதில் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம் என்றார்.

மேலும் கடந்த ஆண்டு பகல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து சுவீடனிடமிருந்து கிடைத்த ஆதரவிற்காக பிரதமர் கிறிஸ்டர்சனுக்கு நன்றி தெரிவித்து கொண்டார். இதற்கிடையே உலகின் 2-வது மிகப்பெரிய கப்பல் நிறுவனமான மெர்ஸ்க் நிறுவன தலைவர் ராபர்ட் மெர்ஸ்க் உக்லாவை மோடி சந்தித்துப் பேசினார்.

பின்னர் கோதன்பெர்க் நகரில் நடந்த ஐரோப்பிய தொழில்துறை வட்டமேசை மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதில் சுவீடனின் முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன் மோடி கலந்துரையாடினார். அப்போது இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு சுவீடன் தொழில் அதிபர்க ளுக்கு மோடி அழைப்பு விடுத்தார். இம்மாநாட்டில் மோடி பேசியதாவது:-

சீர்திருத்தங்கள், உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் புதுமைகளில் வலுவான கவனம் ஆகியவற்றால் உந்தப்பட்டு, இந்தியாவின் சீர்திருத்த விரைவு ரெயில் முழு வேகத்தில் முன்னேறி வருகிறது. எனவே உற்பத்தித்துறை, தூய்மையான எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன், குறைக்கடத்திகள், செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட தொழில் நுட்பங்கள் போன்ற துறைகளில், சுவீடன் மற்றும் ஐரோப்பிய நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் முதலீடுகளை விரிவுபடுத்த வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.

இந்தியாவின் இளம் தொழிலாளர் சக்தி, விரிவடைந்து வரும் நடுத்தர வர்க்கம் மற்றும் தொழில் செய்வதற்கான எளிமை மேம்படுதல் ஆகியவை உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு முக்கிய நன்மைகளாக உள்ளன.

இவ்வாறு மோடி பேசினார்.

முன்னதாக பிரதமர் மோடிக்கு சுவீடனின் உயரிய விருதான ராயல் ஆர்டர் ஆப் தி போலார் ஸ்டார் - கமாண்டர் கிராண்ட் கிராஸ் வழங்கப்பட்டது. இந்தியா- சுவீடன் உறவுக்கு மோடி ஆற்றிய சிறப்பான பங்களிப்பு மற்றும் அவரது தொலை நோக்கு தலைமைத்துவத்தை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com