

தேர்தல் ஆணையம் முறைகேடு செய்து பாஜகவுக்கு உதவுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டி வருகிறார்.
ஒரே வாக்காளர் பல இடங்களில் இருப்பது, பல மாநிலங்களில் ஒரே நபர் வாக்காளராக இருப்பது, போலி முகவரிகள், ஒரே முகவரியில் பல வாக்காளர்கள், மங்கலான புகைப்படங்கள், மற்றும் படிவம் 6-ஐ தவறாக பயன்படுத்துவது போன்ற ஆறு முக்கிய முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் ராகுல் காந்தியின் "வாக்குத் திருட்டு" குற்றச்சாட்டுகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தியது. இதில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பல்வேறு கருத்துக்களை பேசியிருந்தார்.
அப்போது வாக்காளர் பட்டியலில் பலரது முகவரி '0' என இருப்பதை ராகுல் சுட்டிக்காட்டியதற்கு பதிலளித்த அவர், "நாட்டில் பலருக்கும் தங்குவதற்கு வீடு இல்லை. இரவில் சாலையோரம், மேம்பாலத்துக்கு கீழே உறங்குவார்கள். ஆனால், அவர்கள் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் உள்ளது.
அதனால்தான், முகவரியில் '0' என குறிப்பிட்டிருக்கும். ஏழைகளை போலி வாக்காளர்கள் என எப்படிச் சொல்ல முடியும்?" என தெரிவித்தார்.
தொடர்ந்து, "வாக்காளர்களை குறிவைத்து, தேர்தல் ஆணையத்தின் தோளில் துப்பாக்கியை வைத்து சிலர் அரசியல் செய்து வருகின்றனர். பொய் குற்றச்சாட்டுகளைக் கண்டு மக்களும் அஞ்மாட்டார்கள். தேர்தல் ஆணையமும் பயப்படாது" என்று தெரிவித்தார்.