பெங்களூருவில் கனமழை: மரம் முறிந்து விழுந்து குழந்தை பலி

தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. பல இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது.
பெங்களூருவில் கனமழை: மரம் முறிந்து விழுந்து குழந்தை பலி
Published on

பெங்களூரு:

மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக உருவாகியுள்ள மிதமான சூறாவளி புயல், மேற்கு-வடமேற்கு நோக்கி நோக்கி நகர்ந்துள்ளது. இதனால் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

கர்நாடகவில் நேற்று மாலை பெய்யத் தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது. பெங்களூரு, குருமதகல், சாபெட்லா, குஞ்சனூர், கண்டகூர், கொங்கல், மற்றும் எம்.டி.பள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மழை பெய்தது.

பல இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. மழை பெய்யத் தொடங்கியபோது, துளிகளும் பெரிதாக இருந்தன. குறிப்பாக பெங்களூருவில் பல இடங்களில் மழை வெள்ளம் ஆர்ப்பரித்து சாலைகளில் ஓடியது.

இதனால் இரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் தூங்க முடியவில்லை.

ஜீவனஹள்ளியில் உள்ள கிழக்கு பூங்கா அருகே மாலையில் பெய்த மழையின் போது, மோட்டார்சைக்கிள் மீது மரம் விழுந்ததில் 3 வயது குழந்தை உயிரிழந்தது. விபத்து நடந்தபோது இறந்த குழந்தை ரஷா தனது தந்தையுடன் மோட்டா ர்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் குழந்தை பலத்த காயமடைந்தது. உடனடியாக பெற்றோர் குழந்தையை பவுரிங் மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனளிக்காததால் குழந்தை இறந்தது.

புலிகேசி நகர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மழை காரணமாக நகரின் பல பகுதிகளில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியு ள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

யெலகங்காவின் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. வடிகால்களில் தண்ணீர் செல்லாமல், சாலையில் தேங்கி நிற்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

கன மழை காரணமாக பெங்களூவில் இருந்து 10 விமானங்கள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டன. கன மழை காரணமாக பெங்களூரு உட்பட பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக தலைநகரில் பெய்து வரும் கனமழை காரணமாக பெங்களூருவுக்குச் செல்லும் சுமார் 10 விமானங்கள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இண்டிகோ நிறுவனம் கூறுகையில், பெங்களூருவில் நிலவும் மோசமான வானிலை விமானப் பயணங்களைப் பாதித்து வருகிறது. பயணிகள் பணத்தைத் திரும்பப் பெறலாம்.

வானிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், நிலைமைகள் மேம்பட்டவுடன் சீரான மற்றும் சரியான நேரத்தில் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க உறுதிபூண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com