

குஜராத்தின் மிகவும் பரபரப்பான பகுதிகளில் ஒன்றான அகமதாபாத்தின் மானேக் சவுக் பகுதியில், சினிமா பாணியிலான கொள்ளைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நகை கடை ஊழியர் ஒருவர் கட்டுக்கட்டாக பணத்துடன் இருந்த பையை முதுகில் சுமந்தபடி மானேக் சவுக் தெருவில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அவர் தனது செல்போனில் மும்முரமாக பேசியபடி சென்றார்.
அந்த நேரத்தில் அப்பகுதியில் மக்கள் நடமாடிக்கொண்டிருந்தனர். நகை கடை ஊழியரை பின்தொடர்ந்து வந்த திருடன் பணப்பையை திறந்து கட்டு கட்டாக இருந்த பணத்தை ஒவ்வொன்றாக வெளியே எடுத்து தனது பையில் போட்டுக் கொண்டார்.
மொத்தம் ரூ. 5.50 லட்சம் பணத்தைத் திருடிச் சென்று விட்டார். செல்போனில் மூழ்கியிருந்த நகை கடை ஊழியருக்கு, அப்போது என்ன நடந்தது என்பது பற்றிச் சிறிதும் தெரியவில்லை. பின்னர், அவர் தனது அலுவலகத்திற்குச் சென்றபோது, பையைத் திறந்து பார்த்ததில் பணம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இந்த திருட்டுச் சம்பவம் முழுவதும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது, இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் திருடனைக் கைது செய்வதற்கான விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.
பலமுறை பண கட்டுகளை திருடுவது கூட தெரியாமல் இப்படியா செல்போனில் மூழ்கி இருப்பது என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.