சிக்கன் பிரியாணிக்கு பிறகு நள்ளிரவில் தர்பூசணி சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு அவர்களின் மரணத்துக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
சிக்கன் பிரியாணிக்கு பிறகு நள்ளிரவில் தர்பூசணி சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
Published on

மும்பை பைதோனி பகுதியில் உள்ள முகல் கட்டிடத்தில் வசித்து வந்தவர் அப்துல்லா (வயது40). இவரது மனைவி நஸ்ரின்(35), இவர்களுக்கு ஆயிஷா (16), ஷைனப் (13) ஆகிய மகள்கள் இருந்தனர். கடந்த சனிக்கிழமை அப்துல்லா வீட்டுக்கு உறவினர்கள் 5 பேர் வந்து இருந்தனர். எனவே இரவு 10.30 மணியளவில் அப்துல்லா குடும்பத்தினர் உறவினர்களுடன் சிக்கன் பிரியாணி சாப்பிட்டனர்.

உறவினர்கள் சென்றபிறகு அப்துல்லா குடும்பத்தினர் நள்ளிரவு 1 மணி அளவில் தர்பூசணி பழம் சாப்பிட்டனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 5.30 மணியளவில் அவரது குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கும் திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள் வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டனர்.

உடனடியாக அவர்கள் அருகில் உள்ள குடும்ப டாக்டரிடம் சிகிச்சை பெற்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் ஜே.ஜே. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதில் அன்று காலை 10.15 மணியளவில் அப்துல்லாவின் கடைசி மகள் ஷைனப் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அடுத்த சில மணி நேரங்களில் அப்துல்லாவின் மனைவி மற்றும் மூத்த மகளும் உயிரிழந்தனர். இரவில் அப்துல்லாவும் பரிதாபமாக உயிரிழந்தார்.

அப்துல்லா குடும்பத்தினருடன் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட உறவினர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. சிக்கன் உணவை சாப்பிட்ட பிறகு நள்ளிரவில் தர்பூசணி சாப்பிட்ட நிலையில் அப்துல்லா குடும்பத்தினர் 4 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்து உள்ளனர். தர்பூசணி விஷத்தன்மையாக மாறியதால் இந்த துயரம் நேர்ந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஒரே குடும்பத்தில் 4 பேர் திடீரென உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு அவர்களின் மரணத்துக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ஜே.ஜே. மார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com