

உணவகம் ஒன்றில் மாட்டிறைச்சி கொண்டு தயாரிக்கப்பட்ட பிரியாணியை வழங்கியதாக கூறப்படும் நான்கு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்தது.
இந்த வழக்கு, உத்தர பிரதேச மாநிலம் குல்தாபாத் காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட ரோஷன் பாக் பகுதியில் உள்ள ஒரு உணவுக்கூடத்தில் அமைந்துள்ள உணவகம் தொடர்பானது.
லால் மணி திவாரி அளித்த புகாரின் அடிப்படையில், முகமது ஜைத், மிஜ்ஜன், அயன் மற்றும் சம்சுல் லாகா ஆகியோர் மீது BNS மற்றும் உத்தர பிரதேச பசுவதை தடுப்பு சட்டம், 1955 ஆகியவற்றின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் திங்களன்று முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டது.
புகாரின்படி, உணவுக்கூடத்தின் இரண்டாவது மாடியில் அமைந்துள்ள அந்த உணவகத்தில் மாட்டிறைச்சி கொண்டு தயாரிக்கப்பட்ட பிரியாணி விற்கப்படுவதாக பல நாட்களாக தனக்கு தகவல் கிடைத்து வந்ததாக திவாரி குற்றம் சாட்டியுள்ளார். அதை உறுதி செய்வதற்காக தனது கூட்டாளிகள் அந்த கடைக்கு சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், திவாரி அந்த உணவகத்திற்கு சென்று மாட்டிறைச்சி விற்பது குறித்து அதன் உரிமையாளரிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அதன் பிறகு அவர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததாகவும் அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
நகர துணை காவல் ஆணையர் மணீஷ் ஷண்டில்யா, குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட இறைச்சி, அது மாட்டிறைச்சியா அல்லது வேறு ஏதேனும் விலங்கினுடையதா என்பதை உறுதி செய்வதற்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த வழக்கு தொடர்பானல் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.