

மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. 152 தொதிகளுக்கு முதற்கட்டமாக அடுத்த மாதம் 23-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. 142 இடங்களுக்கு 2-ம் கட்டமாக ஏப்ரல் 29-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30-ந்தேதியும், 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 2-ந்தேதியும் தொடங்குகிறது. இந்த நிலையில் மேற்கு வங்க மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி நக்ஸாபாரி நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
நான் இருக்கும் வரை மேற்கு வங்க மாநிலத்தில் என்.ஆர்.சி., தடுப்பு முகாம்கள் இருக்காது. பழங்குடியினர், ராஜ்பன்ஷிஸ் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து பாஜக மிகப்பெரிய அளவில் நீக்கியது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அவர்களுக்கு ஏராளமான திட்டங்களை கொடுத்தது.
மூத்த குடிமக்கள் SIR வரிசையில் நிற்க வைக்கப்பட்டனர். அவர்களுடைய குடியுரிமை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்படி இருக்கையில் வாக்கு கேட்க பா.ஜ.க. எவ்வளவு துணிச்சல்?.
SIR பணியின்போது 220 பேர் உயிரிழந்ததற்காக பாஜக வெட்கப்பட வேண்டும். இறந்தவர்களில் பாதி பேர் இந்துக்கள், மற்ற பாதி பேர் முஸ்லிம்கள்.
இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.