கொச்சி விமான நிலையத்தில் வரிசையில் காத்திருந்த ஆத்திரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பயணி

திடீரென வரிசையில் நிற்கும் ஒரு பயணியின் பையில் வெடிகுண்டு இருப்பதாக கூறினார். பயணி வெடிகுண்டு புரளியை கிளப்பிய சம்பவம் கொச்சி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது
கொச்சி விமான நிலையத்தில் வரிசையில் காத்திருந்த ஆத்திரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பயணி
Published on

திருவனந்தபுரம்:

விமானத்தில் பயணம் செய்யக்கூடிய பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கமான நிகழ்வு. சர்வதேச விமானங்களில் செல்லக்கூடிய பயணிகளுக்கு பாதுகாப்பு நடை முறைகள் அதிகநேரம் இருக்கும்.

அதேபோன்று தான் கேரள மாநிலம் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாடு செல்ல இருந்த ஒரு விமானத்தில் பயணிக்க வந்திருந்த பயணிகள் பாதுகாப்பு நடை முறைக்காக வரிசையில் காத்து நின்றனர். அவர்களில் பத்தினம்திட்டா பகுதியை சேர்ந்த சாபு வர்க்கீஸ் (வயது55 ) என்பவரும் நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திருந்தார்.

அவர் திடீரென வரிசையில் நிற்கும் ஒரு பயணியின் பையில் வெடிகுண்டு இருப்பதாக கூறினார். திடீரென்று அவர் கூறிய இந்த தகவலால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பின்பு சாபு வர்க்கீஸ் சுட்டிக்காட்டிய பயணியின் உடமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அந்த பயணியின் பையில் வெடிகுண்டு இல்லை என்பதும், சாபு வர்க்கீஸ் கூறியது பொய் என்பதும் தெரியவந்தது.

பாதுகாப்பு நடை முறையால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்ததால் எரிச்சல் அடைந்த சாபு வர்க்கீஸ், வெடிகுண்டு இருப்பதாக புரளியை கிளப்பியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசாரிடம் விமான நிலைய அதிகாரிகள் ஒப்படைத்தனர். சாபு வர்க்கீசை நெடும்பாசேரி போலீசார் கைது செய்தனர். பயணி வெடிகுண்டு புரளியை கிளப்பிய சம்பவம் கொச்சி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com