என் மலர்
இந்தியா

2 மனைவிகள் கணவனை சமமாக பிரித்துக் கொள்ள வினோத தீர்ப்பளித்த உ.பி. பஞ்சாயத்து
- இரு மனைவிகளும் கணவர் மீது முழு உரிமை கோரி தினமும் சண்டையிட்டு வந்துள்ளனர்.
- காவல்துறையினர் இந்தப் பிரச்சினையை தீர்க்கும்படி கிராமப் பெரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
உத்தரப் பிரதேசதில் இரண்டு மனைவிகள் ஒரு கணவரை பிரித்துக்கொள்ள பஞ்சாயத்தில் வினோத தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ராம்பூர் மாவட்டத்தில் அசிம் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாக்லியா அகில் கிராமத்தைச் சேர்ந்த ஒரு நபருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர்.
ஒரு திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது, மற்றொன்று காதல் திருமணம். இரு மனைவிகளும் கணவன் மீது முழு உரிமை கோரி தினமும் சண்டையிட்டு வந்துள்ளனர்.
இந்தச் சண்டை முற்றி அசிம் நகர் காவல் நிலையத்திற்குச் சென்றது. காவல்துறையினர் இந்தப் பிரச்சினையை தீர்க்கும்படி கிராமப் பெரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
ஊர் பெரியவர்கள் முன்னிலையில் நடந்த பஞ்சாயத்தில், கணவரை இரு மனைவிகளும் சமமாகப் பகிர்ந்து கொள்ளும் வகையில் ஒரு டைம் டேபிள் போடப்பட்டது.
அதன்படி, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய வாரத்தின் முதல் மூன்று நாட்கள் முதல் மனைவியுடன் இருக்க வேண்டும். வியாழன், வெள்ளி, சனி ஆகிய அடுத்த மூன்று நாட்கள் கணவன் இரண்டாவது மனைவியுடன் இருக்க வேண்டும்.
வாரத்தின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை கணவன் தனது விருப்பப்படி இருவரில் யாருடன் வேண்டுமானாலும் இருக்கலாம்.
இந்த தீர்ப்பை கணவர் மற்றும் இரண்டு மனைவிகளும் ஏற்றுக்கொண்டு, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த வினோத ஒப்பந்தம் அந்தப் பகுதி முழுவதும் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.






